"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Tuesday, October 24, 2006

"பாலியல் கல்வி - பெற்றோருக்கு" -- 16

"சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு இரு சிறகு முளைத்தது !"

சென்ற பதிவின் இறுதியில் ஒரு கேள்வி கேட்டு முடித்திருந்தேன்!

உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் ஆன ஒரு இளம் பெண்ணை, உங்கள் குழந்தையை எப்படி எதிர் கொள்வது என்று.

இது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் குறைவே என்றாலும், விவரமறியா பெண்களிடம் இது இன்னமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இது பற்றி, சுவாரசியமாக சொல்ல வேண்டுமென்றால், பல கதைகள் இருக்கிறது, பதிவை நிரப்ப!

ஆனால், இது ஒரு சங்கடமான நிகழ்வு என்பதால், கிளு, கிளு கதைகளைத் தவிர்க்க விரும்புகிறேன், ஒரு சிலர் முகம் சுளித்தாலும்!!

நேரடியாக இதைப் பற்றிச் சொல்லி மேலே செல்லலாம்.

இன்னும் ஓரிரு பதிவுகள் மட்டுமே இருக்கின்றன!

பெண்கள் வாலிப வயதில், திருமணத்திற்கு முன் கர்ப்பமடைய காரணங்கள் பல உண்டு.

இதில் பாதிக்கு மேல், பெற்றோரின் கவனமின்மையால் நிகழ்கிறது.

பாலியல் பற்றி ஒரு உணர்வை, விழிப்புணர்வை தம் மக்களிடம் ஏற்படுத்தாமல் போவது.

அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து இவர்களை வளர்த்து விடுவது.
கண்டிக்க வேன்டிய நேரத்தில் கண்டிக்காமல், சொல்ல வேண்டியவற்றைச் சொல்லாமல் மெத்தனமாய், அறியாமையாய் இருந்து விடுவது.

கருத்தடை சாதனங்களைப் பற்றி பேச அச்சப்பட்டு, நம்பிக்கையின்றி,... எங்கே இது மேலும் தவறுகளுக்கு வழி வகுத்து விடுமோ, என்று மறைத்து விடுவது,
குடும்ப மான அவமானங்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் இருப்பது,

தான் ஒரு தவறான முன்னுதாரணமாய் இருப்பது,

[வீட்டிலேயே அனைவர் எதிரிலும் குடிப்பது, ஆபாச ஜோக்குகளை விகல்பமின்றிப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறி வைப்பது, தன் வாலிப கால விளையாட்டுகளை தம்பட்டம் அடித்துக் கொள்வது, எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஒரு கணவன் மனைவி சண்டையில், ஒருவரைப் பற்றி ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் எதிரிலேயே ஏசி சண்டை போடுவது, அல்லது தாயோ , தந்தையோ, அடுத்தவரைப் பற்றி குழந்தைகளிடம் சொல்லி அங்கலாய்ப்பது என பல இதில் அடங்கும்].

ஏற்கெனெவே சொல்லியது போல, இவ்வயதுப் பெண்களுக்கு ஒரு அசாதாரண துணிச்சல் வருவது நிஜம்.

அதன் ஆட்டத்தில், சற்று எல்லை மீறப்படுவதும் நிஜம்.

வரம்பு மீறி அடுத்த கட்டத்தை ஆபத்தின்றி அடைய முடியுமோ என்ற அசட்டுத் துணிச்சலில், கவனமின்றி தன்னைப் பறி கொடுத்து பின் விழிப்பது,
சேராத இடந்தனிலே சேர்ந்து கெட்டுப் போவது,
பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாவது,
கருத்தடை சாதனங்களை நம்பி, ஏமாந்து போவது.

இவையெல்லாம் இவர்களே தேடிக் கொண்டு நம்மை சோகத்தில் ஆழ்த்துபவை.

இப்படி மேலே கூறிய ஏதோ ஒன்றினால் கர்ப்பம் ஆன பின்பு நாம் செய்யக் கூடியது என்ன?

வழக்கமாக நாம் பார்ப்பது, அடி, உதை, திட்டு, கருக்கலைப்பு, அல்லது தற்கொலை இவையே!

இவற்றால் என்ன பயன்?
யாருக்கு லாபம்?
நேரடியாக இதை அணுக வேண்டிய முறை என்ன?

இது சம்பிரதாய ரீதியிலோ, சமூக ரீதியிலோ அனைவராலும் ஒப்புக் கொள்ள முடியாத சில எண்ணங்கள்.

அவரவர் நிலைமைக்கேற்ப ஏற்றுக்கொள்வதோ, ஒதுக்குவதோ உங்கள் உரிமை.

இதற்கான வழிமுறைகள் என்னென்ன?

1. கருக்கலைப்பு, [abortion], பொதுவாக நிகழ்வது.

காதும் காதும் வைத்த மாதிரி நடத்திட முடியும் என்பதால் அதிகமாக செய்யப்படுவது இதுவே.
உடற்கூறாக ஒரு சில தகாத விளைவுகள் ஏற்படும் என்று சிலர் பயமுறுத்தக் கூடும்.
ஆனால், ஒரு தேர்ந்த மருத்துவரின் கையில் இது மிக எளிமையாக, சிரமமின்றி முடியும்.
மனோ ரீதியான, தார்மீக ரீதியான காரணங்கள் இதற்குத் தடையாகப் போகும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் குடும்ப மானம் என்ற ஒன்றைக் காட்டியோ அல்லது இது கற்பழிப்பு என்னும் அநாகரீகமான செயலின் மூலம் விளைந்தாலோ இதைச் செய்வதில் தவறில்லை.

2. இரண்டாவது, குழந்தை பெற்று தாமே வளர்ப்பது.[Parenting]

இதற்கு மிகுந்த மனத்திடமும், நம்பிக்கையும், அன்பும் வேண்டும்.
இது நியாயமான முடிவு பெரும்பாலான நிகழ்வுகளில் என்றாலும், பெண்ணின் வயது, சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் சம்பந்தப் பட்டவரின் முழு ஒப்புதல் இதற்குத் தேவை என்பதால் அதிகமாகப் பரிசீலனைக்கு உட்படாத ஒன்றாகவே இது போய் விடுகிறது.
எந்த ஒரு நிகழ்வுக்கும் தாம் பொறுப்பேற்க நினைப்பவர் செய்ய வேண்டியது இது தான் என்பது என் கருத்து.

ஆனால், இதுவும் கற்பழிப்பு மூலம் நிகழ்ந்திருந்தால் அல்லது ஒரு சில நோய்கள் வர வாய்ப்பிருந்தால் கருச்சிதைவே இதை விட நல்ல வழி.

3. இன்னும் சில நேரங்களில், குழந்தை பெற்று அதை ஒரு காப்பகத்தில் விடுவதும் [adoption] ஒரு வழியாக இருக்கிறது.

இது நம்மை உளவியல் ரீதியாக சமாதானம் செய்துகொள்ளும் ஒரு நிகழ்வு.
குழந்தையையும் சாகடிக்க வில்லை!
தானும் வளர்க்கவில்லை !
இதுவும் சிறந்த வழியே.

இதை எல்லாம் எடுத்துச் சொல்வதில்தான் உங்கள் பங்கு வருகிறது.

ஏற்கெனேவே, அவமானத்தாலும், குற்ற உணர்வாலும் குன்றியிருக்கும் அந்தப் பெண்ணைத் திட்ட முற்படாமல், இதைப் பற்றி விவரமாக, தெளிவாக, நிதானமாகப் பேச வேண்டும்.

அவர்களுக்கு உங்கள் கண்டிப்பு இப்போது தேவையில்லை.
அதற்காக இதை அப்படியே மன்னித்து ஒதுக்கிடவும் வேண்டாம்.

வீட்டில் சில கடுமையான கட்டுப்பாடுகள் வந்தே ஆக வேன்டும், இவருக்கும், மற்றவர்க்கும்.

முறையான பாலியல் அறிவுடன், இதுவரை சொல்லியபடி, ஆரம்ப முதலே வளர்த்து வந்தால் முக்கால் வாசி பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.

இவர்களது எதிர்காலக் கனவுகளும், திறமையும் இந்த ஒரு நிகழ்வினால் பாதிக்காத வண்ணம் செயல் படுதல் முக்கியமான ஒன்று.

'சொல்லுதல் யார்க்கும் எளிதாம்' என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க, இங்கே நான் சொன்னது ஒரு பொதுப் படையான கருத்தே அன்றி, இப்படித்தான் என வலியுறுத்தும் ஒன்றல்ல.

பதிவு நீண்டு விட்டதால்,....

அன்புடனும், அறிவுடனும், பொறுமையாக இதை அணுகி நல்ல முடிவு எடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து இதே நிலையில் இருக்கும் ஆண் பிள்ளையை எதிர் கொள்வது எப்படி என்பதையும், மணமுடித்த பிள்ளைகளின் வாழ்வில் உங்கள் பங்கு என்ன என்பதையும் பார்ப்போம்.

10 Comments:

At 7:33 AM, Blogger VSK said...

நேற்றே போட்ட பதிவு! ப்ளாக்கரின் சொதப்பலால் பின்னூட்டம் இட முடியாமற் போனது.
இப்போது சரியாகி இருக்கிறது என நம்புகிறேன்.

தடங்கலுக்கு வருந்துகிறேன்!!

 
At 7:53 AM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

எஸ்கே ஐயா..!
மிக முக்கியமான ஒரு செய்தியை நீங்க எழுதிய இந்த பதிவில் பின்னூட்டம் இட முயன்று முயன்று ...
:)

 
At 7:59 AM, Blogger VSK said...

ஸஸ்பென்ஸ் தாங்கலியே, கோவியாரே!

வாக்கியத்தை சீக்கிரம் முடிங்க!

உங்களுக்கு என் நன்றி!

 
At 8:16 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

அட என்னங்க? பின்னூட்டம் போட இவ்வளவு கஷ்டமா இருக்கு?

மத்தவங்களுக்கும் கஷ்டமா இருந்தா என் பதிவுக்கு வந்து போடுங்கப்பா. (தல, இது பேருதான் பின்னூட்ட ஹைஜாக்.) :-D

 
At 8:23 AM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

பெற்றோர்கள் பாதுக்காப்பான வழிகளை மேலோட்டமாகவோ, முழுவதுமாக சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள் அதை தனக்கு கிடைக்கும் அங்கீகாராமாக எடுத்துக் கொண்டு முயற்சிக்க மாட்டார்களா ? 18 வயது வரை வளர்ந்தவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்குமா ? மாணவர்களுக்கு இது போல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஆசிரியர்கள் வழி சொல்லிக் கொடுப்பதே சிறந்த வழியாக இருக்கும்.

நீங்கள் கூறிய வழிமுறைகள் ஏமாற்றப்பட்டவர்களுக்கு சரியாக இருக்கும்.

 
At 8:28 AM, Blogger VSK said...

இன்றைய கால கட்டத்தில் கருத்தடை சாதனங்கள், தங்கள் உரிமை, போன்றவை பற்றிய விழிப்புணர்வு இருப்பதால், சாத்தியக்கூறுகள் குறைவு என்னும் பொருளில் சொன்னேன்.

முன்பெல்லாம், இது தெரியாமல் எத்தனை கர்ப்பங்கள், எத்தனை அவமானங்கள்!

இதையும் மீறி இது அதிகரித்து வருவதும் உண்மையே.

கருத்துக்கு நன்றி, வைசா.

 
At 8:28 AM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

//இது பேருதான் பின்னூட்ட ஹைஜாக்//

500 க்கும் மேல் தன் பதிவில் பின்னூட்டம் வளர்த்த இலவச கொத்தனாருக்கு இருப்பது பின்னூட்ட ஆசை அல்ல ! பின்னூட்ட பேராசை !
:))

எஸ்கே ஐயா !
பதிவை திசை திருப்புகிறேன் என்று கூறி தொடரை நிறுத்திவிடாதீர்கள் !
பதிவு திசை திரும்ப வில்லை ! பின்னூட்டம் மட்டும் தான் !
:)))

 
At 8:30 AM, Blogger VSK said...

வந்து சரி பண்ண ஆலோசனையும் சொல்லி விட்டு, இப்போது ஹைஜாக் செய்ய முனையும் இந்தக் கயமைத்தனம்......!! :))

நன்றி கொத்தனாரே!

லைசென் ஸ் இல்லாத இடத்துல தான் அதெல்லாம்.

இங்கேதான் பாதுகாப்பா, கோவியார், நீங்கள்லாம் இருக்கீங்களே!

ஒண்ணும் ஆவாது!

:)

 
At 11:19 AM, Blogger VSK said...

//பெற்றோர்கள் பாதுக்காப்பான வழிகளை மேலோட்டமாகவோ, முழுவதுமாக சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள் அதை தனக்கு கிடைக்கும் அங்கீகாராமாக எடுத்துக் கொண்டு முயற்சிக்க மாட்டார்களா ? 18 வயது வரை வளர்ந்தவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்குமா ? மாணவர்களுக்கு இது போல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஆசிரியர்கள் வழி சொல்லிக் கொடுப்பதே சிறந்த வழியாக இருக்கும்.

நீங்கள் கூறிய வழிமுறைகள் ஏமாற்றப்பட்டவர்களுக்கு சரியாக இருக்கும்.//

அப்படி ஒரு எதிர்வினை இருக்கிறது என்றாலும், பெற்றோர்கள் சொல்வதற்கும், மற்றவர்கள் சொல்லித் தருவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் கோவியாரே!

மற்றவர்கள் சொல்வது, தூண்டுதலுக்காக இருக்கும், பொதுவாக.
பெற்றவர்கள் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகத்தான் சொல்லுவார்கள்.
மேலும், பதிவுகளை ஆரம்பம் முதலே படித்து வரும் நீங்கள், நான் இக்கருத்தை வயது வருதற்கு முன்னமிருந்தே பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும் என்று சொல்லியிருப்பதையும் அறிந்திருப்பீர்கள்.

முக்கியமான இக்கருத்தை பின்னூட்டம் வாயிலாக மீண்டும் சொல்ல வைத்ததற்கு மிக்க நன்றி.

கூடவே கொத்தனாரின் பி.ஊ.பேராசையையும் ஜாலியாக சொல்லிக் காண்பித்ததற்கும் நன்றி!
:)))

 
At 3:26 PM, Blogger Sivabalan said...

SK அய்யா,

பல முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்..

மிகவும் பயனுள்ள பதிவு.

மிக்க நன்றி.

 

Post a Comment

<< Home