"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Thursday, August 31, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [4]

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" [4]


"3 - வய்துக் குழந்தையின் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் கல்வி!"

உங்கள் 3 வயதுக் குழந்தை ஷீலாவும், அடுத்த வீட்டுப் பையன்[3 வயதுதான்!] ராஜாவும் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
திடீரென, சத்தம் நின்றுவிடுகிறது!
உங்களுக்கு சந்தேகம்!
மாடி ஏறிச் சென்று, மூடியிருக்கும் குழந்தையின் அறைக்கதவைத் தட்டி [நீங்கள்தான் அவரவரின் தனித்துவம் சொல்லி வளர்த்திருக்கிறீர்களே!] 'வரலாமா' எனக் கேட்டு நுழைகிறீர்கள்!
அங்கே......பிறந்த மேனிக்கு ராஜாவும், ஷீலாவும்!
பார்த்தவுடன் புரிகிறது அவர்கள் இருவரும் இந்த வயதுக் குழந்தைகள் இயல்பாக ஆடும் 'டாக்டர் விளையாட்டு' ஆடிக்கொண்டிருக்கிறார்கள் என!

இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்!

ஒன்று இப்படி..!

குரலை உயர்த்தி, "என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?
சீக்கிரமா ட்ரெஸ்ஸைப் போடுங்க!
ஏ ராஜா! கெளம்பு நீ ஒங்க வீட்டுக்கு!
வரேன்! வந்து ஒங்க அப்பாகிட்ட சொல்றேன்!
இன்னொரு தரம் ஒங்க ரெண்டு பேரையும் இப்படி பாத்தேனோ... அப்ப தெரியும் சேதி!"

இதன் மூலம் நீங்கள் சொல்வது அவர்களுக்கு....?
இருவர் செய்ததும் தவறு.
அவர்கள் கெட்டவர்கள்.
ஆடை களைதல் என்பது ஒரு குற்றம்.

இதன் முழுத் தீவிரமும் புரியாத அவர்களுக்கு இது குழப்பத்தையும், அவமானத்தையும், வருத்தத்தையும் உண்டு பண்ணும்.
ஒரு சாதாரண ஆர்வத் தேடலுக்கா[Curiosity] இவ்வளவு? என குறுகிப் போகும் அவை இரண்டும்!

மாறாக இப்படி....!

"நீங்க ரெண்டு பேரும் ஏதோ விளையாட்டு ஆடிக்கிட்டு இருக்கீங்க போல! சரி, எங்கே, ரெண்டு பேரும் சமர்த்தா, அவங்கவங்க ட்ரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு கீழே வாங்க!
நான் உங்களுக்கு ஒண்ணு காட்டறேன்!"
எனச் சொல்லி அவர்கள் வந்ததும் ஒரு படப்புத்த்கத்தை விரித்து, அவர்களுக்கு, அவர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு ஆண்-பெண் பற்றி விளக்குவது!

இதன் மூலம், ...

'அடுத்தவர் உடல்கூறு பற்றிய ஆர்வம் தவறல்ல.
ஆனால் அதைத் தெரிந்து கொள்ள ஆடை களைய வேண்டிய அவசியம் இல்லை!
உங்களுக்கு உதவ உங்கள் பெற்றோரை எப்போதும் நாடலாம்'
எனப் புரிய வைக்கிறோம்!

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று,

நீங்கள் ராஜாவின் பெற்றோரிடமும் இது பற்றி தெரிவித்து ஒப்புதல் பெறுதல்!

வீண் மனத்தாங்கல்களை தவிர்க்க இது உதவும்!
இல்லையெனில் அவனை அனுப்பிவிட்டு ஷீலாவுக்கு மட்டும் இதைச் சொல்லலாம்.

இங்கு அவ்வாறு சொல்லாமல் மறுத்தல், தனிமையைத் தேட வைக்கும் குழந்தைகளை!
ஒரு கண் அவர்கள் மேல் வைத்து இருப்பது அவசியம்தான்!
குறுக்கீடு கூடாது!
இதைத்தான் வலியுறுத்த விரும்புகிறேன்!

மேலும், இன்னொரு முக்கியமான விஷயம்!

மேலே சொன்னது வெறும் ஒத்த வயதுக் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வரையிலும் தான்!

மற்றவர்கள், ...அவர்கள் பெரியவர்களோ, அல்லது, சற்று வயது வித்தியாசம் உள்ளவர்களோ, இந்தப் பிஞ்சு வயதினரோடு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிந்தால், உடனே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயங்க வேண்டாம்!

நான் சொன்னது புரியவில்லை எனின், பின்னூட்டத்தில் கேளுங்கள், சொல்கிறேன் !

இந்த வயதில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், நிகழ்வுகள் என்ன?

"நீ தனித்துவமானவன்/ள்! [Special]! எனவே உன்னை நேசிக்கக் கற்றுக்கொள்!"

"அதே போல, மற்றவர்களும் அப்படியே! அவர்களை மதி! அன்பு செலுத்து!"

"உனது இந்த தனித்தன்மையை [Individuality] பாதிக்கும், எந்த ஒரு நிகழ்வுக்கும் உன்னை ஆட்படுத்த "எவருக்கும்" உரிமை இல்லை!"

"ஆபத்தான நிகழ்வுகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு !"

"உன் உடலில் மறைக்கப்பட்ட உறுப்புகள்[hidden parts] மற்றவர்களுக்குக் காட்ட இல்லை!"

"உன் தாய் தந்தையிடம் எதையும் நீ கேட்க முடியும்!"

"அவர்கள் என் மீது அன்பு செலுத்த வந்திருப்பவர்கள்!"


போதனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு! இதை எப்படி செயல்முறையில் காட்டுவது என, கோவியார் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது!

"உவ்வாவைத் தொடாதே!" எனச் சொல்ல வேண்டாம்!
"நீர்[ஒண்ணுக்கு] போகும் இடம்" எனச் சொல்லிக் கொடுங்கள்!
பின்னால் அதன் பெயர் உங்களால்/பள்ளியில் அவனுக்கு/அவளுக்கு சொல்லிக் கொடுக்கப் படும் வரை!

குளிக்கும் போது, ஆர்வமிகுதியில் அதன் கை உங்கள் உறுப்புகளின் மீது பட்டால், பட்டென அடிக்க வேண்டாம்!
இது வெகு இயல்பாக நிகழும் ஒரு நிகழ்ச்சி தான்!

"நான் சொல்லியிருக்கேன்ல! இது என்னோடது! அதனால நீ தொடக் கூடாது! இது மாதிரி மத்தவங்களுதைத் தொட்டா அவங்க தப்பா நினைச்சுப்பாங்க!" என அன்புடன் சொல்லுங்கள்!
அடுத்த முறை அது நிகழாது!
ஒரு நேசமும், மரியாதையும் வளர்வதைப் பார்ப்பீர்கள்!

இது போன்ற தருணங்களை உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக எண்ணி, இது தொடர்பாக மேலும் சொல்லத் துவங்குங்கள்!"


தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை ஒதுக்கும் இயல்பு குழந்தைகளுக்கு கிடைத்த வரம்!

'போப்பா! போரடிக்குது!' என்றோ,
ஒண்ணூம் புரியாம மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டோ,
தனக்கு அதில் தொடர விருப்பமில்லாததை சட்டென்று காட்டிவிடும்!

இதில் தாய், தந்தை இருவருக்கும் சம பொறுப்பு உண்டு!

"போதும், போதும்! கண்டத்தையும் சொல்லி குழந்தையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிறீங்க! "என அடுத்தவரைக் குறை கூற வேண்டாம்!
இருவரும் ஒருவருக்கொருவர் இந்த விஷங்களில், ஒரு பொதுவான நிலைப்பாடு கொள்ளல் மிகவும் தேவையான ஒன்று!
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள்!
எது சொல்லலாம், எது இப்போது வேண்டாம் என்பதை!

அடுத்து, ...குழந்தைகள் திடீரென ஒரு கேள்வியை உங்கள் மீது வீசும் போது, தயாராக இருப்பதற்கும், இந்த முன் - கலந்துரையாடல் உதவும்!
ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து முழிக்கிறதோ, இல்லைன்னோ குழந்தையைக் கடிந்து கொள்வதோ தவிர்க்கபடும் இதனால்!

"இப்ப நீ ஒண்ணும் இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு கிழிக்க வேணாம்",
"வாயை மூடு! அதிகப்பிரசங்கி!" போன்ற பதில்கள் குழந்தைகளை உங்களிடமிருந்து அந்நியமாக்கும் என்பதை மனதில் கொண்டு,
ஒரு எசகுபிசகான நேரத்தில் கேட்டால் கூட,
"இப்ப வேணாம் கண்ணு! ராத்திரி, சாப்டவொடனே ஒனக்கு கதை சொல்லுவேன் பாரு! அப்ப சொல்லுவேன், சரியா!" எனச் சொல்லி,... சொன்ன வாக்கைக் காப்பாற்றுங்கள்!

எளிமையான, நேர்மையான பதில்களையே கூறுங்கள்! அது பின்னால் ஒரு தேடலை உங்களிடம் வளர்க்கும்!

"ஏய்! அன்னிக்கு கேட்டியே! நீ எப்படி பொறந்தேன்னு? இப்ப அம்மா உன்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போவேனாம்! அங்க உன் உஷாசித்திக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கொழந்தை பொறக்கப் போவுது! நீயும் வா!" எனக் கூட்டிப் போங்கள்!
அதை பார்த்துவிட்டு வந்ததும் இருக்கிறது உங்களுக்கு ஒரு ஆயிரம் கேள்விகள்!

பெரிய பெண் தாவணி போடும் நேரம்,
அண்ணன் அரை டிரௌசரில் இருந்து பேண்ட் போடும் காலம்,
அவனுக்கு மீசை அரும்பும் காலம்
இவையெல்லம் கூட உங்கள் 3 வயதுக் குழந்தைக்கு பாலியலின் முக்கியத்துவத்தைச் சொல்லிக் காட்டக் கூடிய நேரங்கள்தான்!

எவ்வளவு அதிகம் இந்த சிறுவயதில் சொல்கிறோம் [Too much too soon] என்பது முக்கியமில்லை!
ஐயோ! அப்பவே சொல்லாமப் போனோமே [Too little too late] என பின்னால் வருந்துவதற்கு இது எவ்வளவோ மேல்!
இது அறிவியாளர் கருத்து!

மேலும், இதன் மூலம், தன் தாய்-தந்தையரை நான் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற முக்கியமான, தேவையான பண்பை அவர்கள் மனதில் விதைக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்!

இதோ, அடுத்த ஆண்டு, அதன் கையைப் பிடித்துக் கொண்டு, நீங்களே போய், ஒரு பள்ளியில் சேர்க்கப் போகிறீர்கள்!
அது பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறீர்கள் ...நீங்கள்தான்!
எனவே, கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பைத் தவற விடாமல், நான் மேலே கூறிய கருத்துகளை கவனத்தில் கொண்டு, செயல்படுங்கள்!

அடுத்தது.... "பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுடைய பெற்றோரின் கடமை, தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?" என்பதைப் பார்ப்போம்! "!

Tuesday, August 29, 2006

"பாலியல் கல்வி" - பெற்றோருக்கு [3]


கோவி கண்ணன் 'கோவி'ப்பதால், இனி நேரடியாக 'கல்வி' புகட்ட ஆரம்பிப்போம்!சரியா!
என்ன, எல்லாரும் சிலேட்டு, பலப்பம்லாம் எடுத்துகிட்டு வந்துட்டீங்கதானே!

'அடுத்தது, 3 வயதுக் குழந்தையின் பெற்றோர் அறிய வேண்டியது' எனப் போட்டவுடன் கோவியார் சிங்கையிலிருந்து தொலை பேசினார்!
"விட்டா எதை எழுதறதுன்னு ஒண்ணும் கிடையாதா?
மூணு வயசுக் குழந்தைக்கு என்னங்க தெரியும்?
அப்ப ஏங்க நாம கவலைப்படணும்?
அப்பவே போய் எதுனாச்சும் சொன்னோம்னா, தப்பா போயிறாதா?" என்று!

இது போன்ற 3 வயதுக் குழந்தையின் தாய் ஒருவர், ஒருமுறை என்னிடம் வந்து கேட்டார்கள், "டாக்டர்! என் பையன் என்னை விட்டு நகர மாட்டேன் என்கிறான்.
தனி ரூம், பெட் எல்லாம் போட்டு அவனைத் தூங்கச் செய்துவிட்டு வந்தாலும், ஒரு அரை மணி நேரத்தில் அங்கிருந்து எழுந்து என்னிடம் ஓடி வந்து கட்டிபிடித்துத் தூங்கினால்தான் அவனுக்கு நிம்மதி!
அதுக்கப்புறம் போகவே மாட்டான்!
எங்க பெட்லதான் மீதி ராத்திரி முழுவதும்!
இதனால், எனக்கும் என் கணவருக்குமிடையே பிரச்சினை வருகிறது!
நீ சரியாக வளர்ப்பதில்லை எனத் திட்டுகிறார். என்ன செய்வது?" என்று.

குழந்தைகள் வளரும் காலத்தில் பல நிகழ்வுகள்!
அவற்றை அப்படியே தேக்கி வைத்து மூளையின் ஒரு பகுதியில் போட்டு வைத்து சமயம் வரும் போது உபயோகப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு.
இன்று நாம் காட்டும் ஆசை, பாசம், அன்பு, கோபம், வெறுப்பு, விருப்பு, பொறாமை போன்ற பல்வேறு குணங்கள் ஏதோ திடீரென வருவதில்லை.
சிறுவயது முதலே, பார்த்து, உணர்ந்து, பழகிய நிகழ்வுகளின் விளைவே இவையெல்லாம்!

பிறக்கும் போதே அத்தனை மொட்டுக்களையும் வைத்துத்தான் பிறப்பிக்கிறோம்!
அந்தந்த நேரங்களில் அவை மலர்கின்றன!
[நம்ம பொன்ஸ் சொன்ன மாதிரி!]

சரி, ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும்?

அன்பின் அரவணைப்பு எப்படி இருக்கும் எனத் தெரியும்!
பால் குடித்த இடத்தின் சுவை தெரியும்!
பெண்ணென்றால் ரோஸ் நிறம்[pink]. ஆணென்றால், நீல நிறம்[blue] எனத் தெரியும்!
பொம்மை வைத்து விளையாடுவதா, இல்லை கார், ட்ரக் போன்ற விளையாட்டுப் பொருளா எனத் தெரியும்!
சொப்பு, டீ கோப்பைகளும், சமையலறை சாதனங்களும் வைத்து விளையாட பெண் குழந்தைகளுக்குத் தெரியும்!
கூடைப்பந்து, கிரிக்கட் போன்ற விளையாட்டுகள் ஆண் குழந்தைகளுக்குத் தெரியும்!
கூட இருக்கும் அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, தமக்கையோ ஒரே தொட்டியில் அமர்ந்து, குளித்து, நீரிறைத்து விளையாடும் போது ஆண், பெண் இருவருக்குமிடையே இருக்கும் உறுப்பு வேறுபாடுகள் தெரியும்.
தாய், வீட்டில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லையென்பதால், குழந்தையை முன்னே விட்டு, தான் குளிக்கும் போது,.... பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் இடையே உள்ள உருவ வேறுபாடுகள் தெரியும்!படுக்கையறையில் சில பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்து, ஒன்றும் புரியாமல், ஆனால் அதே நேரம் அதை நினைவின் ஒரு மூலையில் போட்டு வைக்கத் தெரியும்!

ஆச்சரியமாக இருக்கிறதா?
இதுதான் உண்மை!மருத்துவ வல்லுநர்கள், உளநிலை வித்தகர்கள் கண்டறிந்து சொல்லும் உண்மைகள்!

நான் சொன்னது பாலியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே!
இன்னும், அப்பா அம்மா சண்டை போடுவது, அடுத்த குழந்தை பிறந்தவுடன், தன்னை விட்டு, அதை கொஞ்சுவதைக் கவனிப்பது போன்ற நிகழ்வுகளைச் சொல்லப் போனால், பதிவின் நீளம் அதிகமாகி, நோக்கம் சுருங்கி விடும் அபாயம் இருப்பதால் சொல்லாமல் விடுகிறேன்!

மேற்சொன்னவைகளை வைத்து தவறாக எண்ண வேண்டாம்!
இவற்றின் தீவிரமும், பொருளும் புரியாத வயதுதான் இது!
ஆனால், மனதில் நிறுத்திக் கொள்ளப்படுபவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!

இந்த வயதுக் குழந்தைகள் சாதாரணமாகக் கேட்கும் கேள்விதான் நான் பதிவின் தலைப்பாய்ச் சொன்னது!

"அம்மா! நான் எங்கேருந்து வந்தேன்?"

எப்போது இது வரும் என எதிர்பாராததால், எதை வைத்து இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது என்னும் உணர்வு இல்லாததால், பெரும்பாலான பெற்றோர்களின் பதில் இப்படித்தான் இருக்கும்!

"அதுவா கண்ணு! நீ சாமிகிட்டேர்ந்து வந்தே!"
"இதெல்லாம் உனக்கெதுக்கு இப்போ?"
"ஒரு பூதம் கொண்டு வந்து ஒரு நாளு உன்னைய இங்க போட்டுது!"
"ஏய்! குழந்தை கேக்குது! என்னா சொல்லப் போற?, நான் சொல்லட்டுமா?"போன்ற பொறுப்பற்ற பதில்களே!

மாறாக என்ன சொல்லலாம்?

" நீ என் வயித்துக்குள்ளே ஒரு ஸ்பெஷல் இடத்துல வளர்ந்தே! இதோ பாரு, அதோட வரிகள்!"
"நானும் அப்பாவும் நீ வேணுமின்னு சொல்லி உன்னிய இங்கு கொண்டாந்தோம்"

இது போன்ற தெளிவான, எளிமையான பதில்களால் குழந்தை அந்த வயதில் மேற்கொண்டு கேளாமல் திருப்தியடைந்துவிடும்!
உங்கள் மேல் இன்னும் பாசம் கொள்ளும்!
அது வளர, வளர, மேற்கொண்டு சொல்லிக்கலாம்!

பதிவு நீள்கிறது!
இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும்!
அடுத்த பதிவில் தொடர்வோம், ........

அவர்கள் பாலியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது என்னென்ன இந்த வயதில்
என்பது பற்றி!*************************************************************************************

Monday, August 28, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" - 2

வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

முன்னுரையைத் தொடர்ந்து இன்னும் கொஞ்சம், பெற்றோர்களைப் பற்றி சொல்லிவிட்டு மேலே போகலாம் எனக் கருதுகிறேன்.

ஆசையின் தேக்கமெல்லாம் அள்ளிக் கொணர்ந்து தமக்கென ஒரு பிள்ளையைப் பெறுகின்ற பெற்றோர்கள் தாம் பெற்றது இன்னவென பெரும்பாலும் அறிவதில்லை.

தன் வாரிசு என ஒருவனை, ஒருத்தியைக் காட்டிக் கொள்வதிலும், தன் சந்ததி மேலும் வளர்கிறது எனும் அளவிலேயே தன் குழந்தையைப் பார்க்கிறார்கள்.

தான் கற்ற, கற்க மறந்த சில பாடங்களின் அளவுகோலையே கொண்டு தம் அளவிலேயே அக்குழந்தையை சீராட்டி, பாராட்டி வளர்க்க முற்படுகின்றனர்.

தன்னை மீறியும் இவ்வுலகம் வளர்கிறது; அதில்தான் இப்பிள்ளை வளரந்து ஒரு பேர் சொல்லப் போகிறது என்பதனை அறிந்தோ, அறியாமலோ, தன் மரபு அளவுகோள்களை [hereditory values] அதன் மீது திணித்து, அதற்கு ஒரு தாழ்வு மனப்பானமையையோ, அல்லது ஒரு மெத்தனத்தையோதான் பெற்றோர்கள் "பெரும்பாலும்" கொடுத்து வளர்க்கிறார்கள்!

இல்லையென மறுத்தாலும், இதுதான் நாம் காணும் உண்மை நிகழ்வு!

அவர்களை நான் குறை சொல்ல மாட்டேன்.

நிறைய வசதிகளைக் கொடுப்பதின் மூலம், ஒரு நல்ல பரம்பரையை உருவாக்கிடலாம் எனவே பெருமளவில் தாய்-தந்தையர் கணக்கு போடுகின்றனர்.

"வழக்கத்தை மாற்றுவானேன்?"[Why change the tradition?] என்ற மனப்பான்மையே இங்கு அதிகம் காண்கிறோம்!

ஆங்கிலத்தில் மூன்று 'I'களைப் பற்றி ஒரு சொல்லாடல் உண்டு.

தகவல், [Information], பரிமாறல், [Interaction], செயலாக்கம், [Implementation] என்று.

இவை மூன்றும் ஒன்று அல்ல!

தகவலைச் சொல்ல வேண்டும்.பரிமாறும் போது விருப்பு வெறுப்பில்லாமல், இருதரப்புக் கருத்துகளையும் கேட்க வேண்டும்.செயலாக்கும்போது யார் இதனைச் செய்ய வேண்டுமென நாம் நினைக்கிறோமோ, அவர்களைச் செய்ய விட வேண்டும்.

ஆனால், நடைமுறையில் வரும்போது இம்மூன்றையும் கலந்தடித்து குழப்பி விடுகிறோம்.

தகவலைச் சொல்லி, பரிமாறலைத் தவிர்த்து, நம் கருத்தை மட்டுமே வலியுறுத்தி, இப்படித்தான் செய்ய வேன்டும் என நிர்பந்தித்து வளர விடாமல் செய்து விடுகிறோம்.

நாம் எது சரியென நினைக்கிறோமோ, அதைத் தாண்டி அவர்களை வளர விடுவது இல்லை என்பதே இங்கு நிஜமாகிப் போன நிதரிசனம்.

எவ்வளவுக்கெவ்வளவு வசதிகளைக் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்களின் வளர்ச்சியில் நாம் குறுக்கிடுகிறோம் என்பதுதான் உண்மை.

நாம் புனிதமாகக் கருதும் இதிகாசங்கள் இதனைத்தான் நமக்கு உணர்த்துகின்றன!

அவை நிஜமோ, இல்லை வெறும் கதையோ, அதைப் பற்றி இங்கு பேச வேண்டாம்.

இராமாயணம் என்ன சொல்லுகிறது?

எனக்குத் தெரிந்ததெல்லாம் இது மட்டுமே!

"கடவுளே உனக்கு மகனாகப் பிறந்தாலும், உனக்கு நிம்மதி வராது;அவனே உன் சாவுக்கும் காரணமாயிருக்கக் கூடும்!"

இராமன் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஆட்சி புரிந்தான்.
பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தான்.
அதற்கு முன்னர், சுகபோகத்தில் திளைத்தான்.
வனவாசத்திலும், 13 ஆண்டுகள் மனைவி, தம்பியுடன் வாழ்ந்தான்.
அடுத்த ஆறு மாதங்கள் அவளைத் தேடி அலைந்தான்.
கடைசி ஆறு மாத காலம்தான் உண்மையிலேயே இராமாயணம்.
அதை விடுத்துப் பார்த்தால், மற்ற நிகழ்வுகளெல்லாம், வெறும் இடத்தை நிரப்பும் காட்சிகளே!

சரி, கண்ணன் கதைக்கு வருவோம்!
அதில் முக்கால்வாசி அவனது பாலபருவத்தின் கதைகளே!
பிறந்தவுடனேயே இட்ம் மாறினான்.
ஒரு சேரியில் வளர்ந்தான்.
அவன் செய்த விஷமங்கள்!
அவன் நடத்திய லீலைகள்!
அவன் காட்டிய தீரச் செயல்கள்!
அதனைக் கண்டும் காணாமலும், பாராட்டியும், அனைத்திலும் கூடவே இருந்த யசோதையும், நந்த கோபனும்!
அதை விட்டால், நேரே, கீதை உபதேசம்தான்!

இதிலிருந்து என்ன தெரிகிறது!
குழந்தைகளை அவர் போக்கில் விட்டால் அவர்கள் பேராற்றல் கொண்டு விளங்குவர் என்றே!

இதனால் மட்டுமே நான் அவ்விரு கதைகளையும் போற்றுகிறேன்!

சொலவதைச் சொல்லி, நல்லவிதமாய்ப் பகிர்ந்து கொண்டு, அவர்களை அவர் போக்கில் விட, பெற்றோர்கள் முன் வர வேண்டும்.

நம் செல்வம் என்று எதனையும் அவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென எனத் துடிப்பதை விட்டு, அவர்கள் நாளைய உலகின் நல்ல குடி மக்களாக வளர நாம் - பெற்றோராகிய நாம் - உறுதுணையாய் இருக்க வேண்டும்.

இதில் மற்ற எவரையும் விட, நான் முன்னர் சொல்லிய, ஆசிரியர், மற்றவர், நண்பர் இவர் எல்லாரையும் விட பெற்றவர்களே பெரும் பங்கு வகிக்க வேண்டும்.

இனி, பெற்றோராகிய நாம் அவர்களுக்கு எப்படி இருக்க வேண்டும், என்ன வகையில் அவர்களின் இப் பாலியல் அறிவில் உதவி புரிய வேண்டும் எனப் பார்ப்போம்!

அடுத்து.... நிச்சயமாக [!!] 3 வயதுக் குழந்தையின் கேள்வி!!

*******
அடுத்த வாரத்திலிருந்து, ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியில் இப்பதிவு வரும்!
*******

Sunday, August 27, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு!" - 1

ஆகஸ்ட் 23, 2006

முன்னுரை:

அதான் பெற்றாகிவிட்டதே! எங்களுக்கு எதுக்கு என்று கேட்காதீர்கள்! நான் சொன்னது குழந்தை பெற்றோருக்கு!

கடந்த சில நாட்களாக வலைத்தளத்தில் பல்வேறு பூக்கள் பாலியல் பற்றிய இதழ்களை விரித்திருந்தன! கை காட்டுதலும், அடுத்தவரைக் குறை சொல்லலாமோ என்ற எண்ணங்களும் அதில் மணம் வீசுவதைக் கண்டேன். நண்பர் கோவி. கண்ணனிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சில இதுபற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து இது குறித்து எழுதலாமோ என்றிருக்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். ஆர்வ மிகுதியாலும், என் மேலுள்ள அன்பின் காரணத்தாலும் அவர் தன் பதிவில் இது பற்றிய அறிவிப்பை உடனே வெளியிட்டு விட்டார்! இப்போது உங்களுக்கு தப்பிக்க வேறு வழி இல்லை!

"பாலியல்" [Sexology] பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், 'பூனைக்கு யார் மணி கட்டுவது?' என்னும் மனப்பான்மையே நம்மில் அதிகம் நிலவுகிறது என்ற உண்மையினை நாம் இங்கு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இது பற்றிப் பேச, கேட்க, பகிர்ந்து கொள்ள வெட்கமோ, அச்சமோ, அல்லது 'நம்மைத் தவறாக எண்ணி விடுவார்களோ?' என்னும் குற்ற உணர்வோ நம்மில் பலருக்கு ஏற்படுகிறது! அதனால், 'முயற்சித்துத் தவறுதல்' [Trial&Error], அல்லது 'தவறான இடத்தில் அறிவுரை கேட்டல்' [Seeking wrong advice] போன்ற வழிமுறைகளை நாடுகின்ற சோகம் நிகழ்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதைத் தவிர்ப்பதில் பெரும் பங்கு, பெற்றோர், ஆசிரியர், குடும்ப மருத்துவர், நண்பர்களுக்கு உண்டு. ஆனால், இந்த வரிசையில் அது நிகழ்வதில்லை! தலைகீழாகத்தான் நடக்கிறது! விளைவுகளும் தலைகீழாகத்தான் போகிறது!

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், ஒருமுறை என்னிடம் அவர்கள் 14 வயதுப் பையனை அவசரமாகக் கூட்டி வந்தனர். பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தப் போக்கு ஏற்படுவதாகத் தெரிவித்தனர். சிகிச்சை அளிக்கும் போது, முன் தோலின் அடிப்பாகம் [Frenum] அறுந்து ரத்தம் வருவதை உணர்ந்து சிகிச்சை அளித்தபின், என்னவென்று அந்தப் பையனிடம் கேட்டேன். தயங்கித் தயங்கி சொன்னான், 'இல்லை டாக்டர்! முன் தோல் [Foreskin] இருந்தால் கல்யாணம் ஆனபின் இன்பம் அனுபவிக்கக் கஷ்டமாயிருக்கும்' என என் நண்பன் ஒருவன் சொன்னான்; அதான்...கொஞ்சம் வேகமா ஆட்டிப் பாத்தேன்!' என்றான். இதை சொல்வதற்குள் அவனை வெட்கமும், அவமானமும் பிடுங்கித் தின்றது!

இதில் கவனிக்க வேண்டிய நிகழ்வு என்னவென்றால், தவறான ஆலோசனை வழங்கப் பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல! காதல், கல்யாணம் போன்ற நிகழ்வுகளை அவன் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறான், அதைப் பற்றி வீட்டிற்கு வெளியே பகிர்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் கூட!

இந்த எண்ணம் தவறா, சரியா என்பதற்கு பின்னர் வருவோம். அதற்கு முன், பாலியல் கல்வி [Sex Education] பற்றிய தேவையான அறிவு, புரிதல், நமக்கு இன்னும் வரவில்லை என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

நான் எழுத எண்ணியிருக்கும் இந்தத் தொடர், முக்கியமாகப் பெற்றோர்களைக் குறித்தே! அவர்கள் பங்கே இதில் பெரும்பான்மையானது! இது சிலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடும்! 'அது எப்படீங்க? நான் போய் என் மகன்கிட்ட , மகள்கிட்ட இதையெல்லாம் பற்றிப் பேச முடியும்? வாத்தியார் ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கணும் இதையெல்லாம்! இல்லைன்னா, அரசப்பொரசலா தெரிஞ்சுக்க வேண்டியது தான்! நாங்கள்லாம் என்ன சொல்லிக்குடுத்தா வளந்தோம்? வந்துட்டாரு என்னமோ பெருசா! எதுக்கும் ஒரு முறை வேண்டாம்?' என்று பலர் சொல்லுவதை நான் கேட்டிருக்கிறேன்.

'இணைய வசதிகளும், தேடல்களும் நிறைந்திருக்கும் இந்நாட்களில், இதற்கென்ன அவசியம்? வேணுமின்னா அங்கன போயித் தேடிக்கலாமே!' என்றும் சிலர் சொல்லக்கூடும்! ஒப்புக்கொள்கிறேன்! ஆனால், இணையத்தைப் போன்ற நண்பனும் இல்லை; அதைப் போன்ற விரோதியும் இல்லை என்பதே என் கருத்து! வளர்கின்ற பருவத்தில், எதைக் கொள்வது? எதனை விடுவது? எனத் தெரியாத மனநிலையில், அதில் நல்ல தகவல்களையும், கெட்ட தகவல்களையும், ஒரு சேரப் பெற்று குழம்பும் சிலருக்காகவே இத்தொடர்!

ஒரு குழந்தை பிறந்தவுடனேயே, பெரும் பொறுப்பு வந்து விடுகிறது! எங்க அப்பா சொல்லுவார், 'மரம் வெச்சவன் தண்ணி வுடுவாண்டா' என்று. முதலில் சரி, சரி என்று கேட்டுவிட்டு, சற்று வளர்ந்த பின், கல்லூரி அப்ளிகேஷன் போடுவது தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது, அவர் இதைச் சொன்ன போது கேட்டேன், 'உங்களை சொல்றீங்களாப்பா?' என்று. என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், 'இப்பவாவது புரிந்து கொண்டாயே' என்பது போல! நான் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு அது! அது போல, குழந்தைகள் வளரும் போது, அவர்கள் கேட்கும் கேள்விகள் ஆயிரமாயிரம்! எந்த வயதில் எதைச் சொல்லலாம், எப்படிச் சொல்லலாம் என்பது பற்றியே இத்தொடர் அமையும். பெற்றவர்கள் தான் பாலியல் பற்றிய முறையான புரிதலைத் தர முடியும், வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம்.

இதனைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்து கொள்ளவும்....

ஆரோக்கியமான முறையில். இதில் சில சமயம் வெளிப்படையான சில உண்மை நிகழ்ச்சிகளையும், கருத்துகளையும் சொல்ல வேண்டி வரும். அதன் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ, அல்லது குற்றம் சாட்டுவதோ இல்லை என்னும் டிஸ்கியை இப்பவே போட்டுடறேன்! தொடரின் நோக்கம் திசை திரும்பினாலோ, திருப்பப்பட்டாலோ, உடனே நிறுத்தப்படும்! வாரம் இரு பதிவுகள் வரும்... வரணும்! பார்க்கலாம்...
எப்படிப் போகுதுன்னு!

முருகனருள் முன்னிற்கும்!

இன்னிக்கு வெறும் முன்னுரை மட்டும்தான்!

அடுத்ததாக....."நான் எங்கேருந்தும்மா வந்தேன்?" -- 3 வயதுக் குழந்தையின் கேள்வி!

முருகன் அருள் முன்னிற்கும்!



ஒம்

சோதனை பதிவு

*************************************

முருகன் அருள் முன்னிற்கும் !
வேலும் மயிலும் துணை !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !

*************************************

கனவு மெய்ப்பட வேண்டும் .....