"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Sunday, March 30, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா!" -- [4]

"எய்ட்ஸுக்கே உதவியா!" -- [4]

'அண்ணி' உள்ளே போகும்வரை காத்திருந்த சுகுமார், குரலைச் சற்றுத் தாழ்த்தியபடியே,

"இந்த....ஆசனவழியில் சிலர் உறவு கொள்வதாகப்[anal sex] படித்திருக்கிறேன். இதன் மூலமும் இந்த நோய் பரவுமா?" என்றான்!

'நல்ல கேள்விடா! மற்ற எல்லா வழிகளையும் விட எளிதில் ஜவ்வுத்தோல் கிழிந்துபோகக்கூடிய அபாயம் இந்த இடத்தில் அதிகமாக இருப்பதால், இதன் மூலம் இந்த நோய் பரவும் வாய்ப்பும் மிகவுமே அதிகமாகிறது. செலுத்துபவரை விட, வா[தா]ங்கிக் கொள்பவர்க்கே இது அதிகமாகப் பரவும் என இதுவரையில் கிடைத்திருக்கிற கணக்கைக் கொண்டு சொல்லலாம்.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னன்னா,
இந்த முறையில், ஆண், பெண் இரு பாலருமே ஓரினமாகவோ, அல்லது மாற்றினத்தோடோ ஈடுபடுகிறார்கள்.


இருவரில் யாராவது ஒருவருக்காவது இந்த நோய்க் கிருமிகள் உடலில் இருக்க வேண்டும், இது பரவ.

இந்த முறை, அந்த முறை என்றில்லாமல், எந்த முறையில் செய்யப்படுகிறது என்பதை விட, இந்த நோய் ஏற்கெனவே இருப்பவரால் மட்டுமே இது அடுத்தவருக்குக் கொடுக்கப்பட முடியும் என்பதை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும். '

" சரி! இப்போ ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்போறேன்! இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள்... அதாம்ப்பா, 'ஹோமோ'ன்னு[] சொல்றோமே, அவங்கதான்.... இவங்களாலதான் இந்த நோய் அதிகமா பரவுதுன்னு சொல்றாங்களே, அதைப் பத்தி உங்க மருத்துவத்துறை என்ன சொல்லுது? என்றான் சுகுமார்.

"இதைப் பத்தி சொல்லியே ஆகணும்! மிக மிகத் தவறான கருத்து இது!
ஓரினச் சேர்க்கையாளர்கள் தான் இந்த நோய் பரவ வெகுவான காரணம் என்ற தவறான ஒரு குற்றச்சாட்டு பொதுவாக இருந்து வருகிறது.
இது துளிக்கூட உண்மையல்ல!


இவர்களில் பலர், தவறான உடலுறவு, போதை மருந்துக்கு அடிமையாதல், ஒன்றுக்கும் மேற்பட்டவரோடு உறவு கொள்ளுதல் போன்ற செயல்களின் மூலம், இந்த நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட யாரவது ஒருவரிடமிருந்து, ஹெச்.ஐ.வி. கிருமியைப் பெற அதிக வாய்ப்பிருக்கிறது என்பது தான் உண்மை.

ஆனால், இதையே இருபாலர் உறவு கொள்வோருக்கும் கூடச் சொல்ல முடியும்! அவர்களுக்கும் இந்தக் குற்றசாட்டு பொருந்தும்.... அவர்களும் இது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையானால், நிச்சயம் இந்த நோயால் தாக்கப்படக் கூடும்!

எது எப்படி இருப்பினும், பாதுகாப்பான உடலுறவின் மூலம், பெற வேண்டிய இன்பத்தைப் பெறலாம்;

பெற வேண்டாத நோய்களைத் தவிர்க்கலாம்.

இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

ஆணுறை, காண்டம் போன்றவை சீக்கிரமே கிழிந்து போகும் சாத்தியக்கூறுகள் இந்த ஆசனவழி உறவில் மிக அதிகம். இதையும் கவனத்தில் கொள்ளவும்.
பொதுவாக, இந்த ஆசனவழி உறவு, உடலுறவு கொள்ள ஏற்றதொரு வழி அல்ல! ஆபத்துகள் அதிகம்! கவனம்! கவனம்!!' என்றேன்
.

"சரிடா! வா கொஞ்சம் காலாற நடந்துகிட்டே பேசலாம்" என்று கிளம்பினான் சுகுமார்.

' ஏண்டா? என்ன சமாசாரம்?" என்று சிரித்தேன்!'

" சில விஷயம் இருக்கு! தனியாக் கேக்கணும்! அதான்!" என வெள்ளையாகச் சிரித்தான் சுகுமார்!

"நாங்க ஒரு 'வாக்' போயிட்டு இதோ வந்திடறோம்' எனக் குரல் கொடுத்துவிட்டு வாசல் பக்கம் நடந்தேன்!

*************************

Labels: ,

Friday, March 28, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா!!" - [3]

"எய்ட்ஸுக்கே உதவியா!!" - [3]


"அப்போ, இந்த [AIDS} எப்படித்தான் ஒருத்தருக்கு வருதுன்னு சொல்லலாமில்ல?" பக்கோடாவை மென்றுகொண்டே கேட்டான் சுகுமார்.

"அப்படிக்கேளு!

முறைப்படி பாதுகாப்பில்லாத உடலுறவின் மூலமே இது பெரிதும் பரவுகிறது.
அடுத்து, ஒரே ஊசியை பலர் உபயோகிப்பதின் மூலம்[இதில் எவருக்காவது முன்னமேயே இந்த நோய் இருந்தால் மட்டுமே],
அல்லது நோய்க்கிருமி உள்ள ரத்தப் பரிமாற்றத்தால்[HIV infected blood transfusion] இது நிகழலாம்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் கருவிலிருக்கும் தன் குழந்தைக்கோ, அல்லது தாய்ப்பால் மூலமாகவோ இந்த நோயைக் கொடுக்க முடியும். மற்றபடி, சாதாரணமாக அடுத்தவருடன் பழகுவதின் மூலம் இந்த நோய் பரவ வாய்ப்பில்லை!

"அப்போ,...... முத்தம் கொடுத்தா எய்ட்ஸ் வராதா?"

ஒரு எய்ட்ஸ் நோயாளி உன்னைக் கன்னத்தில் முத்தமிடுவதால் உனக்கு எய்ட்ஸ் வராது.... உன் கன்னத்தில் ஏதும் வெளிக்காயங்கள் இல்லாத பட்சத்தில்! அவருடன் கை குலுக்குவதாலோ, உன்னைக் கட்டிப் பிடிப்பதாலோ இது வரவே வராது! தாராளமா இதெல்லாம் நீ அவரோட செய்யலாம்!

"வாய்க்கும் வாய்க்குமான முத்தம்... அதுவும் ஆழ்ந்த முத்தம்[deep kiss] ... இந்த, நாக்கெல்லாம் ஒட்டிகிட்டு செய்வாங்களே அதுமாரி கொடுத்தா..??"

ரொம்பத்தான் விவரமா கேக்கறே!
பொதுவாக இதன் மூலமும் பரவாது என்றாலும், இது போன்ற முத்தங்களில், உதடுகளோ, அல்லது வாயின் உட்பகுதியோ சற்று காயப்படும் வாய்ப்புகள் இருப்பதால், கிருமிகள் கலக்கும் வாய்ப்பு இருப்பதால், இதைத் தவிர்ப்பது நலம்..... அவரோடு மட்டும்!!

"கேக்கறேனேன்னு தப்பா நினைச்சுக்காகாதே! இந்த வாய் வழி உறவு[oral sex] பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? இதன் மூலம் இந்த நோய் வர வாய்ப்பிருக்கிறதா?" என்று தயங்கியபடியே கேட்டான் சுகுமார்!

கண்டிப்பாக! இவ்ளோ கேட்டுட்டே! இதைக் கேக்கலைன்னா எப்படி! சொல்றேன் கேளு!
எப்படி வருதுன்னு தெரியலைன்னாலும், வாய் வழி உறவு மூலமா, ஹெச்.ஐ.வி. நோய் பரவ முடியும்னு ஆதாரபூர்வமா சொல்லலாம். வாய்க்குள் இருக்கும் மெல்லிய ஜவ்வுத் தோல் வழியே ஹெச்.ஐ.வி. கிருமிகள் ரத்தத்தில் பரவும் அபாயம் இருக்கிறது. இதையும் மீறி இதைச் செய்துதான் ஆகணும்னா, தடுப்பு முறைகளைக் கையாளுவது நலம். காண்டம், ஆணுறை போன்றவற்றை உபயோகித்து இதைச் செய்யலாம். தவிர்ப்பது மிகவும் நல்லது!

"அப்போ, நேர்வழி உறவு.. அதாவது, வழக்கமான முறையில் உடலுறவு கொள்வதால் என்ன ஆகும்?"

என்ன ஆகும்? நிச்சயமா இந்த நோய் வரும்... அதாவது.....இப்படி உறவு கொள்ளும் இருவரில் எவர் ஒருவருக்காவது இந்த நோய் இருந்தால்! சொல்லப்போனால், இந்த நோய் வருவதற்கு இதுதான் முதன்மையான காரணம் எனச் சொல்லலாம். பாதுகாப்பில்லாத உறவு இவர்களோடு கொண்டால், இந்தக் கிருமிகள் அடுத்தவருக்கு வந்தே தீரும்! ஆணுறை, காண்டம் இல்லாமல் இவர்கள், அல்லது, இவர்களுடன் உறவு கொள்ளவே கூடாது.

"இந்தக் கிருமி, கிருமின்னு சொல்லியே பயமுறுத்திறியே, படவா! இது எவ்ளோ நேரம் உயிரோட இருக்கும்னு சொல்லுடா!" என்றான் சுகுமார்!
இவ்ளோ நேரம் இதைக் கேக்கலியேன்னு நினைச்சேன்! கேட்டுட்டே! இதுவரைக்கும் சொன்ன எது மூலமா வெளியே வந்தாலும், இந்த நுண்கிருமி [வைரஸ்] ஒரு 20 நிமிஷத்துக்குத்தான் உயிரோட இருக்கும்! அதுக்குள்ள இது அடுத்தவரோட ரத்தத்துல கலக்கலைன்னா, செத்திரும்! உன்னோட கையில ஒரு கீறலும் இல்லைன்னா உள்ளங்கையில இதை 20 நிமிஷம் வைச்சுக்கிட்டு இருந்தேன்னாக்கூட ஒண்ணும் ஆகாது! கிருமி செத்துப் போயிரும்! புரிஞ்சுதா!" என்றேன் நான்!

"சும்மா பயமுறுத்தாம, விஷயத்தை மட்டும் சொல்லுங்க!" என்று சொல்லியபடியே, கரண்டியுடன் வெளிவந்து ஒரு முறை முறைத்தார் என் மனைவி!

"சரி, சரி! நீ போய் சமையலைக் கவனி!" எனச் சமாளித்தேன்!


[தொடரும்]

Labels: ,

Wednesday, March 26, 2008

"எய்ட்ஸுக்கே உதவியா-2."

"எய்ட்ஸுக்கே உதவியா-2."
அவ்ளோதானா? ரத்தம், இல்லாட்டி உடலுறவு, இப்படித்தான் இது பரவுமா? என்றான் சுகுமார்.

பொதுவா, இதுதான் சரின்னாலும், ரத்தம், விந்து[sperm], பெண்வழியில் சுரக்கும் நீர்[vaginal fluids], மார்பில் சுரக்கும் பால், மற்றைய உடலில் இருந்து ரத்தத்துடன் கலந்த நீர்[bodily fluids] இவற்றின் வழியே இந்த நோய் பரவலாம்.

"சரி! இந்த -ஹெச்.ஐ.வி. எப்படி 'எய்ட்ஸ்' ஆக மாறுகிறது? "

'இந்த வைரஸ் நம் உடலில் ஒரு தடுப்புச் சக்தியாக இருந்து, வரும் நோய்களை எதிர்க்கும் CD4 என்கின்ற 'உதவி செய்யும் செல்களை [Helper Cells] நேரடியாகத் தாக்கத் தொடங்குகிறது! இந்த செல்களின் அளவு குறைந்து வருவதை வைத்து, இந்த எய்ட்ஸ் என்னும் நோய் வந்து கொண்டிருக்கிறது என நாம் அறிய முடியும்.
இந்த வைரஸ் உடலில் கலந்து, பல ஆண்டுகளுக்குப் பின்னே இது நிகழத் தொடங்குகிறது. எனவே, இந்த வைரஸ்களின் அளவைக் குறைப்பதன் மூலம், எய்ட்ஸ் வருவதை தள்ளிப் போட முடியும்... அதற்குத்தான் மருந்துகள் உதவுகின்றன!

"இந்த ஹெச்.ஐ.வி எப்போத்தான் ஆரம்பிச்சுதுன்னு சொல்லுங்களேன்! அதை விட்டுட்டு.....!!" உள்ளிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்தது

'சொல்றேன், சொல்றேன்! நீ ஏன் கத்தறே!' என ஒரு பம்மிய குரலில் சொல்லிவிட்டு, சுகுமாரைப் பார்த்து, 'எப்போ வந்துது, எப்படி வந்துதுன்னு யாருக்கும் தெரியாது! ஆனா, 1959ல காங்கோ நாட்டுல கின்ஷாஸா நகரில் கொடுக்கப்பட்ட ஒரு ரத்தத்தில் இந்த வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை இன்னும் பரிசோதித்த போது, இந்த வைரஸ் 1950-களில் தொடங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
இருப்பினும், 1979-1981-ல் அமெரிக்காவில் ஒரு சில நோயாளிகள் எந்தவொரு காரணமுமில்லாமல், எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் செல்களின் அளவுகள் குறைந்திருப்பதைக் கண்டபோது, இதை ஆராயத் தொடங்கியதின் விளைவாக இந்த எய்ட்ஸ் என்னும் நோய் இருப்பது ஒப்புக் கொள்ளப் பட்டது!

1983-ல் தான் ஹெச்.ஐ.வி. வைரஸுக்கும் எய்ட்ஸ் என்னும் நோய்க்கும் இருக்கும் தொடர்பு உறுதிப்படுத்தப் பட்டது.


"அப்படீன்னா, ஹெச்.ஐ.வி. வந்தா நிச்சயம் எய்ட்ஸ் வந்தேதான் தீருமா? " சற்று பயந்த குரலில் கேட்டான் சுகுமார்!
'இல்லை! இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர்தான் இந்த நிலைக்குச் செல்கிறார்கள். அதற்கும் ஒரு 10 வருஷம் பிடிக்கும். வாழ்க்கை முறைகள், உடல்நலக் கோளாறுகள் இந்த கால அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்.
இன்று இருக்கும் மருத்துவக் கண்டுபிடிப்புகளால், இதன் தீவிரத்தை வெகுவாகக் குறைக்க முடியும் என்பது ஒரு நல்ல சேதி.'

"சரி! இது எனக்கு இருக்கா இல்லியான்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு சொல்லேன்!"

'என்னடா! இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறே! அதான் முதல்லியே கேட்டேன்ல! சொல்லக்கூடாது!' என நான் அலற,
உள்ளிருந்து வெளிவந்த என் மனைவி,

"ஏங்க! உங்களுக்கு எதுனாச்சும் இருக்கா! அவர்தான் ஆரம்பத்துலியே எனக்கு இல்லை, ஒரு தகவலுக்காகத்தான் கேக்கறேன்னு சொல்லித்தானே இதை ஆரம்பிச்சீங்க! பேசாம அவர் கேக்கற கேள்விக்கு மளமளன்னு பதில் சொல்லுங்க!' என அதட்டினார்!
'ஒரு எளிய ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே இதை உறுதிப் படுத்த முடியும்! ஒரு சில அறிகுறிகள் இந்த நோய்க்கென இருந்தாலும், அவற்றை மட்டும் வைத்தே இதுதான்னு சொல்ல முடியாது. அப்படி என்ன அறிகுறிகள்னு தானே கேக்கறே!

காரணமில்லாத திடீர் எடைக் குறைவு
வறட்டு இருமல்
அடிக்கடி வரும் காய்ச்சலும், இரவில் வரும் அதிகப்படியான வியர்வையும்
அதீதமான உடல் சோர்வு
அக்குள், தொடை, கழுத்து இவைகளில் நெறி கட்டுதல்,
தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கும் வயிற்றுப்போக்கு
வாய், நாக்கு, தொண்டை போன்ற இடங்களில் வரும் வெள்ளைத் திட்டுகள்
ந்யுமோனியா போன்ற நுரையீரல் காய்ச்சல்
உடலின் பல இடங்களில் திடீரெனத் தெரியும் சிவப்பு, பழுப்பு திட்டுகள்
நினைவாற்றல் குறைவு, மனவழுத்தம், மற்றும் சில நரம்பு சம்பந்தமான நோய்கள்.

ஆனால், முன்னரே சொன்னது போல, இவற்றில் ஏதாவது இருந்தாலே, தனக்கு இந்த நோய் என எவரும் பயப்படத் தேவையில்லை. ரத்தப் பரிசோதனை ஒன்று மட்டுமே இதை உறுதிப்படுத்தும் ஒரே வழி!
இந்த அறிகுறிகள் வர வேறு பல மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன.' என்றேன்.

ஒரு தட்டில் சூடான பக்கோடாவும், இரண்டு கோப்பைகளில் தேநீரும் கொண்டுவந்து வைத்தார் என் மனைவி!

'இதைச் சாப்பிட்டுகிட்டே பேசுங்க' என்று சிரித்தார்.


[தொடரும்]

Labels: ,

Monday, March 24, 2008

" எய்ட்ஸுக்கே உதவியா"? [1]



" எய்ட்ஸுக்கே உதவியா"? [1]

அன்று 'வலென்ட்டைன்' தினம்! அதாங்க! காதலர் தினம்னு அவங்கவங்க சொல்லிகிட்டு இருக்காங்களே... அதேதாங்க... !

எனது ஒரு சில பதிவுகளில் நான் எழுதிய என் கவிதைகளையும்[???] கருத்துகளையும் படித்த என் மனைவி என்னிடம் சொன்னார்!

'ஏங்க! உங்களுக்கு வேற வேலை இல்லியா? நீங்க ஒரு டாக்டர்தானே! அது சம்பந்தமா எதுனாச்சும் எழுதக் கூடாதா?'

'என்ன? இப்ப பாலியல் கல்வி - பெற்றோருக்கு' ன்னு ஒண்ணு எழுதினேனே! போறாதா?' என அப்பாவியாய்க் கேட்டேன்!

'ம்க்கும்! நீங்கதான் மெச்சிக்கணும்!அதை எழுதி கிட்டத்தட்ட ஒன்பது மாசம் ஆகப் போகுது! "நான் தான் அதைப் பெத்தாச்சே, எதுக்குப் படிக்கணும்"னு யாரும் அங்கே வர்றதில்லை! நீங்க வேற ஏதாவது எழுதுங்க! இந்த 'ஹோமோஸெக்ஷுவாலிடி'.. ஓ.. இங்கே தமிழ்ல தான் பேசணும்ல!... ஓரினச் சேர்க்கையாலத்தான் எய்ட்ஸ் அதிகமா பரவுதுன்னு சொல்றாங்களே! அதைப் பத்தி எழுதுங்க. புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்கட்டும்!"

என் ஞானக்கண்[!!!] திறந்தது!

இதோ, உங்களை எல்லாம் அடுத்த சில நாட்களுக்கு தொல்லை பண்ண முடிவு செய்து................எப்படி இதைத் தொடங்கலாம் என !யோசித்துக் கொண்டிருந்தேன்!

அப்பத்தான் வந்தான் என் நண்பன் சுகுமார்!

"டேய்! எய்ட்ஸுன்னா என்ன? எப்படி வருது? இதுக்கு என்ன அறிகுறிங்க? எப்படி கண்டுபிடிப்பது? இதுக்கு என்ன சிகிச்சை செய்வது? இதுனால என்ன ஆகும்? இதைப் பத்தி ஆளாளுக்கு என்னமோ சொல்றாங்களே அதெல்லாம் உண்மையா பொய்யா? நீதான் டாக்டராச்சே! எனக்கு இப்ப இந்த உண்மை தெரிஞ்சாகணும்" என ஓடி வந்தான்!

"ஏண்டா! எதுனாச்சும் ஏடாகூடமா செஞ்சுட்டியா? சொல்லுடா" என அதட்டினேன்!

"அதெல்லாம் இல்லைடா! இதையெல்லாம் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. தப்புத்தண்டா பண்ணாம இருக்கறதுக்காகத்தான்! அதான் கேட்டேன்," என சிரித்தான்!

"சரி! அப்போ, நீ கேள்விகளாக் கேளு. நான் சொல்றேன்" என்றேன், ஒரு வழி கிடைத்த நிம்மதியுடன்!!

இதோ! அவன் கேள்விகளும், என் பதிலும்!

"எய்ட்ஸ்"ன்னா என்ன?

அக்வைர்ட் இம்யோனோ டிஃபிஷியென்ஸி ஸிண்ட்ரோம் [Acquired Immuno Deficiciency Syndrome]] இதுதாங்க எய்ட்ஸ்[AIDS] அப்பிடீன்னு சொல்லப் படுவது! அதாவது, 'தானே வரவழைத்துக் கொண்ட தன்னெதிர்ப்புக் குறைவை விளைவிக்கும் அறிகுறிகளைக் கொண்ட ஒரு நோய்' என தமிழில் விளக்கலாம்!
இந்தப் பெயர், ஒரு மருத்துவரால் ஒரு சில அறிகுறிகளாலுமோ, அல்லது சில பரிசோதனைகள் மூலமோ
அறியப்படுவதுன்னு மட்டும் இப்போதைக்குப் புரிஞ்சுக்கோ!


'இது எப்படித்தான் வருது?'

ஹெச்.ஐ.வி. வைரஸ்[HIV Virus], அதாவது, ஹ்யூமோஇம்யூனோ டிஃபிஷியென்ஸி வைரஸ் [Human Immuno Deficiency Virus] என்னும் ஒன்றால் இந்த நோய் வருகிறது.

'வாங்க சுகுமார்! வீட்ல எல்லாரும் நலமா?" எனச் சொல்லியபடி தேநீருடன் சுகுமாரை வரவேற்றவர், என்னருகில் வந்து, 'ஐயோ! இது எல்லாருக்கும் தெரியுங்க! இது எப்படி பரவுகிறதுன்னு சொல்லுங்க சாமி!' என முறைத்தார்!

'சொல்லத்தானே போறேன்! அதுக்குள்ள ஏன் இப்படி தொணதொணக்கற? சுகுமார் இன்னும் கொஞ்ச நேரம் இங்கதான் இருப்பான்.நீ போய் சமையலைக் கவனி' என அவரை ஒருமாதிரியா சமாளிச்சேன்!

"நீ கேளு சுகுமார்! இதனால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த நோயை, ரத்தமும் ரத்தமும் கலப்பதின் மூலமாகவோ, அல்லது பாலியல் மூலமாகவோ.... அதாவது, உடலுறவின் மூலமாகவோதான் பெறுகிறார்கள்! ஒரு தாய் தனது குழந்தைக்கும் இதைத் தர முடியும்.... கருவுற்றிருக்கும் போதோ அல்லது தாய்ப்பாலைத் தரும்போதோ! இந்த நோயைப் பெற்றவர்கள் சிறிது காலத்தில் எய்ட்ஸ் என்னு நிலையை அடைகிறார்கள் என்பதே நடப்பு!' என்றேன்.

[தொடரும்]
*************************************

Labels: ,