"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Thursday, May 31, 2007

"லப்-டப்" -- 23 "பொன்ஸை விரும்பும் பூமியிலே!"

"லப்-டப்" -- 23 "பொன்ஸை விரும்பும் பூமியிலே!"

எனது இனிய நண்பர் பொன்ஸ் சொன்னதைத் தொடர்ந்து இந்த "லப்-டப்" தொடரை ஆரம்பித்து, அநேகமாக முடியும் இடத்திற்கு வந்திருக்கிறது!

எனக்குத் தெரிந்த அளவில் சாதாரணமாக நமக்கு வரக்கூடிய இதய நோய்களைப் பற்றி, இதுவரை ஓரளவு சொல்லியிருக்கிறேன்.

இன்னும் ஒன்றே ஒன்று மீதமிருக்கிறது.

குழந்தைகளுக்கு வரக்கூடிய இதய நோய்களைப் பற்றி, சுருக்கமாகச் சொல்லி, இந்தத் தொடரை முடிக்க எண்ணுகிறேன்.

குழந்தைகளுக்கு வரும் இதயநோய், இருவகைப்படும்.

பிறப்பிலேயே வருவது[congenital]; பின்னர் வருவது[acquired] என.


எனவே, இதனை ஒன்றொன்றாகப் பார்ப்போம்.

பிறப்பிலேயே வருவன:[congenital]

எதெது எப்படி நிகழ வேண்டும் என்ற ஒழுங்கில்லாமல், அதது, அல்லது, ஒரு சிலது மாறுபடுவதால் ஏற்படுவன இவை!

இதயத்தின் ரத்த ஓட்டம் எப்படி நிகழ வேண்டுமோ, அப்படி நிகழாமல், கருவில் குழந்தை வளருகையில் ஏற்படும் குறைபாடுகளால் சில கோளாறுகள் நிகழ்கின்றன.

ஒரு சிறு ஓட்டையில் தொடங்கி, மொத்த இதய அமைப்பே மாறுபடும் வரை இது நிகழலாம்.

இதை இரு வகையாகப் பிரிக்கலாம்.

1. ஓட்டைகள்: [holes]

இதயத்தின் வலது, இடது பக்கங்களைப் பிரிக்கும் தடுப்புச் சுவரில் உண்டாகும் குறைபாடால், ஒரு ஓட்டை ஏற்பட்டு, சுத்த, அசுத்த ரத்தங்கள் கலக்கும் அபாயம் நிகழ்கிறது.


ஏ.எஸ்.டி.[Atrial Septal Defect]



வலது, இடது ஆரிக்கிள்களுக்கிடையே உண்டாகும் ஓட்டை இது.
பிராணவாயு[Oxygen] நிரம்பிய வலது ஆரிக்கிள், இது குறைந்த இடது ஆரிக்கிளுடன் கலக்கிறது.

பாதிக்கும்[50%] மேற்பட்ட இந்தவகை ஓட்டைகள் தானே மூடிக் கொளுகின்றன; சிகிச்சை ஏதும் இல்லாமலேயே, ஓட்டையின் அளவு சிறிதாக இருக்கையில்!

பெரிய ஓட்டைகள் அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்யப்படும்.

வி.எஸ்.டி.[Ventricular Septal Defect]



வலது, இடது வெண்ட்ரிக்கிளுக்கிடையில் உண்டாகும் ஓட்டை இது.

மேலே சொன்னதற்கு எதிர்மாறாய், சுத்த ரத்தம் இப்போது இடத்திலிருந்து, வலதுக்குச் செல்லுகிறது.

சிறிய ஓட்டைகள் பெரிதான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
ஆனால், பெரிய ஓட்டையால், இரு பகுதி ரத்தங்களும் கலப்பதால், ரத்த அழுத்தம் அதிகமாகி, நுரையீரலும் இதனால் பாதிக்கப்பட்டு, மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.

2. வால்வுகளினால் ஏற்படும் பாதிப்புகள்: [Valvular disease]

ஆரிக்கிளில் இருந்து வெண்ட்ரிக்கிளுக்குச் செல்லும் வழியில் இருக்கும் வால்வுகளில் ஏற்படும் குறைபாடுகளால், நிகழ்வன.

ஸ்டினோஸிஸ்:[Stenosis] முழு அடைப்பு:

முழுதுமாக திறக்காமல் போதல். வழக்கத்தை விடவும் அதிக வேகத்துடன் இதயம் செயல்பட்டு இந்த வால்வைத் திறக்க செயல்படுகிறது.

அட்ரீஸியா[Atresia] குறையான வால்வ் :

பிறப்புக் குறைபாடால்[Birth defects], வால்வின் அளவு குறைந்து உருவாகிறது.
ரத்தம் செல்ல வழியில்லை இப்போது!

ரீகர்ஜிடேஷன்:[Regurgitation] மேலும், கீழும் செல்லுதல்:

வால்வ் சரியாகச் செயல்படாமல், ரத்தம் இருவழியாகவும், மேலும், கீழுமாக,இருபக்கமும் செல்லுகிறது.

இது எல்லா வால்வுகளும் நிகழலாமென்றாலும், பல்மோனரி வால்வில்[] நிகழுகையில், விளைவுகள் அதிகமாயிருக்கும்.

இப்போது மிகவும் அதிகமாய் நிகழும் ஒரு குறைபாடைப் பார்க்கலாம்.


டெட்ராலஜி ஆஃப் ஃபால்லட்[Tetrology of Fallot]



4 வித குறைபாடுகள் இதில் நிகழ்கின்றன.

பல்மோனரி வால்வ் அடைப்பு[Pulmonary valve Stenosis ]

அளவில் பெரிய வி.எஸ்.டி.[VSD]

இடது பக்கமே இருக்க வேண்டிய அயோர்ட்டா எனும் மஹாதமனி, வலது, இடது வெண்ட்ரிக்கிளின் மேல் அமைவது.[Over riding of the Aorta]

வலது வெண்ட்ரிக்கிள் வீக்கம்[Right Ventricular Hypertrophy]

இவற்றால், தேவையான அளவு ரத்தம், நுரையீரலில் இருந்து பிராணவாயுவை எடுக்க முடியாமல் போகிறது; இதனால் சக்தி குறைந்த ரத்தம் தொடர்ந்து உடலின் பல பாகங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

குழந்தை நீல நிறமாகிறது!

நீலக்குழந்தை[Blue Baby Syndrome] என்பது இதுவே!

இது உடனடியாக அறுவைசிகிச்சை மூலம் சரி செய்யப்பட வேண்டிய ஒன்று.

நிலைமையின் தீவிரத்தைப் பொருத்து, பிறந்த உடனேயேவோ, அல்லது சிறிது நாட்கள் கழித்தோ இது செய்யப்படாவிடில், உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னும், வாழ்நாள் முழுதும் மருந்து, மாத்திரைகள் சாப்பிடவும் வேண்டும்.


பெற்றோர்கள் இதற்கு தாமே பொறுப்பு என மனக்கவலை அடையக்கூடும்!

இவர்கள் செய்ய வேண்டியதென்ன?


இதை எப்படி கண்டு பிடிக்கலாம்?

இறுதிப் பதிவில் பார்க்கலாம்.












Wednesday, May 16, 2007

"லப்-டப்" -- 22 "ரத்தமிங்கு உறையட்டும்"

"லப்-டப்" -- 22 "ரத்தமிங்கு உறையட்டும்"

ஆதிகாரணி[Primary Factor] ஒன்று, உறைகாரணிகள்[Clotting Factors] 12, எனச் சொன்னேன் முன் பதிவில்!

வான் வில்லி ப்ராண்ட் காரணி[Von Willi Brandt Factor] என ஒன்று ரத்தத்தில் இருக்கிரது.

கொல்லாஜென்[collagen] ப்ளேட்லெட்டுகளோடு சேர்ந்து ரத்தம் உறைய இந்த வான் வில்லி ப்ராண்ட் காரணி[vwbF] உதவுகிறது.


ப்ளேட்டுகளின் மேல் இருக்கும் க்ளைகோ ப்ரொடீன்களோடு[Glycoproteins], கொல்லாஜென் இழைகள் சேர்ந்து ரத்தம் உறைய இந்த வா.வி.ப். காரணி ஒரு பாலமாக உதவுகிறது.


இந்தக் காரணியின் அளவு ரத்தத்தில் குறையும் போது வா.வி.ப். நோய்[V W B Disease] என்றழைக்கப்படுகிறது.

இப்போது உறைகாரணிகளைப்[Clotting Factors] பார்க்கலாம்.

இவை மொத்தம் 12 வகைப்படும், ஒன்று முதல் 12 வரை இதற்கு எண்கள் கொடுத்திருக்கிறார்கள்.


இது தவிர, தனித்தனியே சிலவாயில் நுழையாத பெயர்களும் இவற்றுக்கு உண்டு.


உள்வழிப்பாதைக்கு[Intrinsic Pathway] 8, 9, 10, 11, மற்றும் 12 உதவுகிறது.

மற்றவை வெளிவழிப்பாதைக்கு.[Extrinsic Pathway]

இவற்றில் ஏற்படும் குறைபாடுகளால் ரத்தம் உறைவதில் தடுமாற்றம் வரும்.

இங்கு நான் மிகவும் பொதுப்படையாகச் சொல்லி வருகிறேன்.

குறிப்பிட்ட குறைபாடுகளால் வரும் நோய்கள் மிகவும் அரிது, அபூர்வம் என்பதால் இப்படி!!

இப்போது சில முக்கியமான நோய்களைப் பார்ப்போம்!

ஹீமோஃபீலியா A: [Hemophilia A]

இது ஒரு பரம்பரை நோய்.

உறைகாரணி 8 -ன் குறைபாட்டினால் வருவது இது.

பொதுவாக மூட்டுகளில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, இது உறைய தாமதமாகும்.

ஒரு சின்ன காயம் பட்டாலும், ரத்தப்போக்கு சீக்கிரமாக நில்லாது போகும் இக்குறைபாடு உள்ளவர்களுக்கு.

உறைகாரணி 8 செயற்கையாக உடலுள்ளே செலுத்தப்பட்டு, இக் குறைபாடைத் தவிர்க்க முடியும்.

ஹீமோஃபீலியா B: [Hemophilia B]

காரணி 9-ன் குறைபாட்டால் இது நிகழ்கிறது.

ரத்தம் உறைய அதிக நேரம் ஆகிறது இப்போது.

வா.வி.ப். குறைபாடு:[V W B Deficiency/Disease]

ப்ளேட்லெட்டுகள் ஒன்று சேர்வது தடைப்பட்டு, காரணி 8-ன் வேலையைத் தடுக்கிறது இது.

பொதுவாக, வார்ஃபேரின்[Warfarin], ஹெபாரின்[Heparin] என்னும் மருந்துகள் இந்த வகை நோய்களுக்கு உதவுகின்றன.

நாம் சாதாரணமாக, தலைவலி போன்றவற்றிற்கு உபயோகிக்கும் ஆஸ்பிரின்[Aspirin] மாத்திரையைப் பற்றி ஒரு வார்த்தை.

ப்ளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு மிகவும் தேவையான ஒன்று.

ஒரு காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கு தொடங்கும் போது, இந்தப் ப்ளேட்லெட்டுகள் அதிகமாகி, ரத்தம் உறைய உதவுகிறது.

ஆஸ்பிரின் இந்த செயலைத் தடுக்கிறது.

இது இருவகைகளில் செயல்படுகிறது!

ரத்தம் உறையக்கூடாத நிலையில் இருக்க வேண்டிய இதய நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!

ஆனால், உறைகாரணிக் குறைபாடு இருப்பவர்களுக்கு இது ஒரு ஆட்கொல்லி!

இதில், எல்லாவற்றையும் நான் சொல்லவில்லை.....

மேற்கொண்டு அதிக விவரம் வேண்டுவோர், பின்னூட்டத்தில் கேட்கவும்.

Tuesday, May 08, 2007

"லப்-டப்" -- 21 "ரத்தம் உறையும் நேரம்"

"லப்-டப்" -- 21 "ரத்தம் உறையும் நேரம்"

"டாக்டர்! என் பையனுக்கு அடிபட்டுதுன்னா ரத்தம் கொட்டிகிட்டே இருக்கு. நிக்கவே மாட்டேங்குது. இது எதனாலே?" என கவலையுடன் கேட்டார் பாஸ்கர்.

இதற்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தேன்.

"ஒரு அடி படுது.

ரத்தம் வருது.

இது அப்படியே வந்துகிட்டு இருந்தா என்ன ஆகும்?

எல்லா ரத்தமும் வெளியேறிடும்.

ஆனா, பொதுவா என்ன நடக்குது?

கொஞ்சம் ரத்தம் ஊத்துது.

பிறகு நின்று போகிறது.

இதற்கு ரத்தம் உறைந்து போகுதல்[Hemostasis] எனப் பெயர்.

இது நான்கு நிலைகளில் நிகழ்கிறது.

1. பாதிக்கப்பட்ட ரத்தக்குழாயின் வழியே வரும் ரத்தஓட்டம், நாளம் சுருங்குவதால் குறைகிறது.

2. ப்ளேட்லெட்டுகள்[Platelets] என முன்னம் பார்த்தோமே, அவை "த்ராம்பின்"[Thrombin] என்னுமொரு பொருளால், அடிபட்ட இடத்தில் குவிய ஆரம்பிக்கிறது.


ஒரு தாற்காலிக அடைப்பானாக[Plug] இது செயல்பட்டு ரத்த ஓட்டத்தை இன்னும் கட்டுப்படுத்துகிறது.

இந்தத் அடைப்பான்[Plug] இன்னும் பல ப்ளேட்லெட்டுகளை இந்தக் கட்டுக்குள் நிறுத்தி, இன்னும் இறுக்கமாகிறது.

இவற்றிலிருந்து சுரக்கும் சில புரதப்பொருள்கள் இந்தத் தடுப்பானை ஒரு கெட்டியான அடைப்பானாக மாற்றுகிறது.

3. இது சற்று நேரத்தில், ஒரு தடுப்பானாக[Blood clot]] மாறி ஒரு கட்டிப்பொருளாக ஆகிறது.

4. ரத்த ஓட்டம் இவ்வாறு தடைப்பட்டதின் செயல் முடிந்ததும், இது கரைய வேண்டும்!

இதற்கு ரத்தத்தில் இருக்கும் ப்ளாஸ்மின்[Plasmin] என்னும் ஒரு பொருள் உதவுகிறது.



இது மாதிரியான ரத்தக்கட்டி உருவாக, இரு வகையில் செயல்பாடு நடக்கிறது.

ஒன்று, உள்ளிருந்து உள்வழியாக[Intrinsic Pathway]; அடுத்தது, வெளிவழியாக[Extrinsic Pathway].

தனித்தனியே இவை இரண்டும் நிகழ்ந்தாலும், ஒரு இடத்தில் ஒன்று சேர்கின்றன, ரத்தக்கட்டியாகும் போது!

எதற்காக இப்படி இருவழிகள் என்க் கேட்கிறீர்களா?

இயற்கைக்குத் தெரியும் இது தேவையென!

உள்ளேயே சில சமயங்களில், அடிபடாமலேயே, பல காரணங்களால், [புகை பிடிப்பதால் நாளம் நொறுங்கிப் போய், ரத்த அழுத்தம் அதிகமாகி நாளம் நெளிந்து, இப்படி பல] ரத்த நாளம் உடைந்து உள்ரத்தப் போக்கு[Internal bleeding] நிகழலாம்.

இப்போது, சிவப்பு அணுக்களாலேயே[RBC's] ரத்தக்கட்டி உருவாகி,ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

இதற்கு "உள்வழி"[Intrinsic pathway] மட்டுமே போதும்.

வெளிக்காயம் மூலம் ஏற்படும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த, "வெளிவழி"[Extrinsic Pathway] உதவும்.

இந்த இருவழிகளும் நிகழ்வதற்கு ரத்தத்தில் இருக்கும் சில புரதப்பொருள்கள்[Protein substances] துணை புரிகின்றன.

இவற்றிற்கு, "உறை காரணங்கள்"[Clotting Factors] எனப் பெயர் சொல்லலாம்.

ஆனால், இவற்றிற்கெல்லாம் ஒரு ஆதிகாரணம் இருக்கிறது!


அது பற்றியும், இந்த "உறை காரணங்களைப்" பற்றியும்......

அடுத்த பதிவில்!!



இங்கு சொல்லியிருப்பதெல்லாம் ஒரு தகவலுக்காகவே!
உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பதே சிறப்பான வழி!