"கசடற"

அறிவியல் தொடர்பான எனக்குத் தெரிந்த தகவல்களை, ஒரு மருத்துவன் எனும் பார்வையில் சொல்ல விழைகிறேன். முழுக்க முழுக்க இவை என் கருத்துகள் மட்டுமே! முருகனருள் முன்னிற்கும்!

Saturday, January 20, 2007

"லப் - டப்" -- 8 "சாதிகள் இருக்குதடி பாப்பா!"

"லப் - டப்" -- 8 "சாதிகள் இருக்குதடி பாப்பா!"

பதினேழாம் நூற்றாண்டு மத்தியில், உலகின் முதல் ரத்த பரிமாற்றம்[Blood Transfusion] நடைபெற்றது.
ஆனால், நோயாளி இறந்து போனார்!
அதன் பிறகு, நோயாளியைக் காப்பாற்ற முயற்சி செய்யும் கடைசி ஆயுதமாகவே ஒரு 150 ஆண்டுகள் கழிந்தன.... பெரும்பாலும் தோல்வியாகவே!

இதைப் பற்றி சிந்தித்த ஒரு மருத்துவர் பெரிதும் முயன்றார். வெற்றியும் பெற்றார் 1900-ல்!
அவர் பெயர் கார்ல் லேண்ட்ஸ்டைனெர்[Karl Landsteiner].

மருத்துவ உலகின் "மனு" இவர்!

ஆமாங்க! ரத்தத்தில் 4 தனித் தனி சாதிகள் இருக்கு எனச் சொன்னவ்ர் இவர்தான்!

A, B, AB, O என்ற நாலுவகைப் பிரிவுகள்.
இவற்றை நிர்ணயிக்க உதவும் நால்வகைப் பொருட்கள், நம் உடலிலேயே இருப்பவை,.. கீழே!
A, B, என இரு 'தடுப்பு சக்தியை தூண்டும் என்சைம்கள்'[Immune response enzymes],ஆன் டிஜென்கள்[antigens].
anti-A, anti-B என இவற்றிற்கு மாற்றான விளைவை, எதிர்ப்பை [] உண்டுபண்ணும் ஆன்டிபாடிகள்[antibodies]

ஒரே ஒரு உதாரணம் கொடுக்கிறேன்.

'ஏ' வகை ரத்தம் தனது சிவப்பணுக்களின் மேல்பாகத்தில், 'ஏ' ஆண்டிஜெனைக் [A antigen]கொண்டிருக்கும்.

இதன் மூலம், 'ஆண்டி-ஏ' ஆண்டிபாடிகள் [anti-A antibodies] உருவாகமால் தடுக்கப் படுகிறது.
'ஏ' குரூப் ரத்தம் தானமாக[கொடையாக!] வழங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் படுகிறது.

அதே சமயம், 'பி'குரூப் ரத்தம் இவர்களுக்குச் செலுத்தப்படும் போது, நோயாளியின் ரத்தத்தில் இருக்கும் ப்ளாஸ்மாவில் உள்ள ஆண்டி-பி ஆண்டிபாடிகள்[anti-B antibodies] இதனை வேற்றுப் பொருளாகக் கருதி, ரத்தம் உடலில் சேரவிடாமல் முறியடித்து, உயிருக்கே ஆபத்தையும் உண்டு பண்ணுகிறது.

இது போலவே, மற்ற பிரிவுகளுக்கும் நிகழ்கிறது!

இதிலும் ஒரு தனிச் சாதி எல்லாருக்கும் உதவும் ஒரு சாதியாக இருக்கிறது!


'ஓ' குரூப் ரத்தம் ஏபிஓ ஆண்டிஜென்களை[ABO antigens] உருவாக்குவதில்லை.
நோயாளியின் ரத்தத்தில் இருக்கும் ஆண்டிபாடிகளுக்கு இப்போது வேலையில்லாமல் போகிறது.
எனவே, இவ்வகை ரத்தம் மற்ற எல்லாவகை ரத்தத்துடனும்[ஏ, பி, ஓ] தயக்கமின்றி சேரும்!
இவ்வகை ரத்தம் உள்ளவர்கள் "பொதுவான கொடையாளிகள்"[Universal donors] எனப்படுவர்.

ஆனால், இவர்களால் எல்லாருக்கும் கொடுக்கத்தான் முடியுமே தவிர, பெறமுடியாது!
'ஓ'குரூப் ரத்தம் ஒன்றுதான் இவர்களுக்குச் சேரும்.

இப்படி ஒன்று இருந்தால், இவர்களுக்கு ஒரு மாற்று இருக்கவேண்டும் என்பதுதானே நியதி!

ஆம், 'ஏபி' வகை ரத்தப் பிரிவாளர்[AB group] எவரிடமிருந்தும் ரத்தம் பெற முடியும், ஏபிஓ ஆண்டிபாடிகளை[ABO antibodies] உருவாக்காததால்!
இவர்கள் ரத்தம் எவருக்கும் சேராது, தன்வகை குரூப்பைத் தவிர!
ஏனெனில், இவர்கள் ரத்தம் இருவகையான ஆண்டிஜெனையும்[A&B] உண்டுபண்ணுவதால், எந்த ரத்தத்தையும் அந்நியமாகப் பார்ப்பதில்லை!

ஒரு சில சொட்டு ரத்தத்தைப் பரிசோதித்து, இவ்வகைகளை சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம், ஒரு ஆய்வுக்கூடத்தில்!
உங்கள் வகைப் பிரிவு இன்னது என்பதை ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தனது குரூப் இன்னது எனத் தெரியாதவர்கள், இப்பதிவைப் படித்ததும், மறக்காமல் சென்று
, உங்கள் மருத்துவரிடம் சொல்லி, உடனே பரிசோதித்துக் கொள்ளவும்!!

இந்த குரூப் சமாச்சாரம் நமது மரபணுக்களில் [genes] உள்ள ஒரு குரோமோஸோமில் [Chromosome 9] பதிந்திருப்பதால், உங்கள் குரூப் எப்போதும், எந்த நிலையிலும் மாறாத ஒன்று!!
பிறந்தது முதல், மரிக்கும் வரை சாதி மாறாது!

மாற்று வகைப்பிரிவுகள் உள்ள தம்பதியர்க்குப் பிறக்கும் குழந்தைகளின் பிரிவு[Genetic Inheritance] எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பது, இப்பதிவிற்குச் சற்று அதிகம் என்பதால் தவிர்க்கிறேன்.
வேண்டுமென்பவர் கேட்டால், பின்னூட்டத்தில் பார்க்கலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம்!

ஒரு சில பிரிவுகள், குறிப்பிட்ட சில நோய்களால் அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது!


உதாரணமாக, 'ஏ' குரூப் மக்கள் அம்மை நோய், தொண்டைகுழாய்[Oesophagus],கணையம்[pancreas],வயிறு [Stomach] புற்றுநோய் இவற்றால், மற்ற வகையினரை விட அதிகமாகப் பாதிக்கப்படலாம்.

குடல்[வயிற்றுப்] புண்[Peptic Ulcer]காலரா,[Cholera] ப்ளேக் [Plague], மலேரியா[Malaria] முதலிய நோய்கள் 'ஓ' குரூப்பினரை அதிகமாய்த் தாக்கும்.


அடுத்த பதிவில், தாயே தன் கருவை எப்படி, தான் ஒன்றுமே செய்யாமல், அழிக்கிறார்[??!!] என்பதைப் பார்ப்போம்!


[இதில் கூறியிருக்கும் கருத்துகள், முழுக்க, முழுக்க மருத்துவ சம்பந்தமானவையே! மேல்விவரத்திற்கு உங்கள் மருத்துவரை அணுகவும்!]










22 Comments:

At 2:37 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

நல்லாத்தேன் தலைப்பு வைக்கறீங்க ஒவ்வொரு பதிவுக்கும்!

இதில் இந்த Rh Factor என்பதையும் நுழைத்தால் என்ன ஆகிறது? A+ve வகை ரத்தம் இருப்பவர்களுக்கு A-ve வகை ரத்தம் அளிக்க முடியுமா?

அடுத்து இப்படி ரத்தம் ஏற்றும் பொழுது முழு ரத்தமும் ஏற்றப்படுவதில்லை எனக் கேள்விப் பட்டு இருக்கிறேன். அது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

//மாற்று வகைப்பிரிவுகள் உள்ள தம்பதியர்க்குப் பிறக்கும் குழந்தைகளின் பிரிவு[Genetic Inheritance] எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பது, இப்பதிவிற்குச் சற்று அதிகம் என்பதால் தவிர்க்கிறேன்.//

இது ரொம்ப இண்டரஸ்டிங்கான கேள்வியாச்சே. வெளிப்புறத்தில் அப்பா சாயலா அம்மா சாயலா எனப் பேசுவது போல் ரத்தத்தில் அப்பா செல்லமா அம்மா செல்லமா என எப்படி முடிவாகிறது?

//வேண்டுமென்பவர் கேட்டால், பின்னூட்டத்தில் பார்க்கலாம்.//

கேட்டாச்சு, பார்க்கலாமா? :))

//அடுத்த பதிவில், தாயே தன் கருவை எப்படி, தான் ஒன்றுமே செய்யாமல், அழிக்கிறார்[??!!] என்பதைப் பார்ப்போம்!//

இது பற்றித்தானே கீதா சாம்பசிவமும் ராமநாதனும் விக்கிபசங்க பதிவில் எழுதி இருக்கிறார்கள்?

நான் ஓ பாஸிடிவ், கொடுத்துக் கொடுத்து சிவந்த ரத்தம்! :))

 
At 3:55 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

விக்கியில் கீதாக்காவும், டாக்டரும் எழுதிய பதிவுகளின் சுட்டிகள் இதோ

சுட்டி 1

சுட்டி 2

சுட்டி 3

 
At 6:00 PM, Blogger VSK said...

கேட்டுட்டீங்க, முதலாகவே வந்து!:)

தம்பதியினரின் ரத்தப் பிரிவுகளும், அவற்றின் மூலம் விளையும் சேர்க்கையையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

[மனைவி, கணவன் என்பதை அவரவர் பிரிவைப் பொருத்து எடுத்துக் கொள்ளவும்.]

அதாவது,

'ஏ' குரூப்பும், 'ஏ' குரூப்பும் இணைந்தால், 'ஏ+ஏ' சேர்ந்து, குழந்தையின் குரூப் 'ஏ'யாகவே அமையும்.

இதே போல,
'ஏ' + 'பி' = 'ஏ+பி'= 'ஏபி' குழந்தை.
'ஏ' + 'ஓ' = 'ஏ+ஓ'= ''ஏ' சிசு

'பி' + ''ஏ'= 'பி+ஏ'= "ஏபி" சிசு
'பி' + 'பி'='பி+பி'= 'பி' சிசு
'பி' + 'ஓ'= 'பி+ஓ'= 'பி' சிசு

'ஓ' + 'ஏ'= 'ஏ+ஓ'= 'ஏ' சிசு
'ஓ' + 'பி'= 'பி+ஓ'= 'பி' சிசு
'ஓ' + 'ஓ'= 'ஓ+ஓ'= 'ஓ' சிசு

எப்படியெனில்,
பொதுவாக, 'ஏ', 'பி' பிரிவுகள் 'ஓ'வை விட வலுவானவை.

ஆகவே, 'ஏ' அல்லது 'பி'யுடன் 'ஓ' துணையின் ரத்தம் சேர்கையில், குரூப் 'ஏ' அல்லது 'பி'யாகவே அமைகிறது!

எனவே, கொத்தனாரே, உங்கள் மனைவியின் ரத்தசாதி 'ஓ' இல்லாமல் வேறு ஏதாவதாக இருப்பின், அவர் "செல்லமாகவே" குழந்தையின் ரத்தம் அமையும்!:))

உங்கள் மனைவியின் ரத்தமும் 'ஓ' வகையாக இருந்தால் மட்டுமே உங்கள் குழந்தையும் 'ஓ' வகை ரத்தப்பிரிவில் வரும்!

'ஏ' 'பி' தம்பதிகளுக்கு இரண்டும் வலுவானதால் பிறக்கும் குழந்தை 'ஏபி' வகையில் அமையும்!

இது ஒரு பொதுவான விதிதான்!
நூற்றுக்கு நூறு சரியல்ல!

ஒரு சில நோய்களால், வலுவான ரத்த குரூப் வலுவிழந்த நிலையில், பொதுவாக வலு குறைந்தது எனக் கருதப்படும் 'ஓ' வகை இதை டாமினேட் செய்ய முடியும்!

மற்ற கேள்விகளுக்கு ஒரு டீ குடித்துவிட்டு வந்து சொல்லுகிறேன்!!

:))

 
At 6:10 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

சரியாப் படிக்கிறேன் என காண்பிக்க....

உங்க வாய்ப்பாட்டில் ஏபி கணவர் /மனைவி பற்றிய சூத்திரங்களை விட்டுவிட்டீர்களே... :)

 
At 6:26 PM, Blogger VSK said...

சும்மா கேள்வி மட்டும் கேட்டுட்டு அப்பிடியே போயிடறீங்களா, இல்லை, ஒழுங்கா பாடத்தை எல்லாம் படிக்கிறீங்களானு ஒரு டெஸ்ட் வெச்சேன்!

ஆத்தா! [கொத்ஸ்!] நீங்க பாஸாயிட்டீங்க!:)

நான் சொல்லியிருக்கற மாதிரி, 'ஏ', 'பி' இரண்டுமே வலுவானவையே![Dominant]

எனவே, எது "அந்த" நேரத்தில் அதிக வலுவாய் இருக்கிறதோ, அதைப் பொருத்து, ரத்த வகை குழந்தைக்கு அமையும்.
'ஏ'', 'பி' அல்லது' ஏபி' இம்மூன்றுமே வர வாய்ப்பு இருக்கிறது.

Good boy!
Keep it up!!
:))

 
At 8:38 PM, Blogger VSK said...

//இதில் இந்த Rh Factor என்பதையும் நுழைத்தால் என்ன ஆகிறது?//
இதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேனே, நீங்கள் தந்த சுட்டிகள் மூலம்!!:))

//A+ve வகை ரத்தம் இருப்பவர்களுக்கு A-ve வகை ரத்தம் அளிக்க முடியுமா?//

முடியாது! பாஸிடிவும், நெகடிவும் இங்கு இணைவதில்லை!

 
At 2:11 PM, Blogger சேதுக்கரசி said...

//'ஏபி' வகை ரத்தப் பிரிவாளர்[AB group] எவரிடமிருந்தும் ரத்தம் பெற முடியும்//

புதுத் தகவல். நன்றி. அடுத்த பதிவை எதிர்நோக்கும்...

 
At 5:21 PM, Blogger VSK said...

நன்றி, 'சேதுக்கரசி'

Btw, my mail id is ommuruga41@gmail.com
:))

 
At 5:33 PM, Blogger G.Ragavan said...

என்னடா எஸ்.கே இப்படிச் சொல்லீட்டாரே! அவர் முருகனடியவராச்சே...இப்படிச் சொல்லலாமான்னு ஓடி வந்தா..மறுக்க முடியாத மாதிரி சொல்லீருக்கீங்க. :-)))

ஒரு ஐயம். ஏ வகையை பி வகைக்கு ஏற்றினால்....ஆண்டிபாடிகள் சண்டை போடும். சரி. ஆனால் ஏ வகையை ஓ வகைக்கு ஏற்றினால்? அங்கே சண்டை போட ஆண்டிபாடி இல்லையே. இருந்தும் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை?

என்னுடைய இரத்தம் O-ve வகையைச் சார்ந்தது.

 
At 6:08 PM, Blogger VSK said...

//ஒரு ஐயம். ஏ வகையை பி வகைக்கு ஏற்றினால்....ஆண்டிபாடிகள் சண்டை போடும். சரி. ஆனால் ஏ வகையை ஓ வகைக்கு ஏற்றினால்? அங்கே சண்டை போட ஆண்டிபாடி இல்லையே. இருந்தும் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை?//

என்னங்க ஜிரா!
இப்படி சொல்லிட்டீங்க?

'ஏபிஓ' ஆண்டிஜென்கள்[antigens]தானே இருக்காது எனச் சொல்லியிருக்கிறேன், 'ஓ'குரூப்பில்!

ஆண்டிபாடிகள்[antibodies] இல்லை எனச் சொல்லவில்லையே!

அதனால்தான், 'ஓ' வகையினரால், எல்லாரிடமிருந்தும் ரத்தம் பெற முடிவதில்லை, தங்கள் சாதியைத் தவிர!

'ஏபி' சாதி இதற்கு நேர் எதிர்!

அவர்களிடம் ஆண்டிபாடிகள்[antibodies] இல்லை, ஆண்டிஜென்கள்[antigens] உண்டு!
எனவே எவரிடமிருந்தும் பெற முடியும்!

புரியற மாதிரி சொல்லி இருக்கேனா!

:)

 
At 12:55 PM, Blogger குமரன் (Kumaran) said...

எஸ்.கே. ஒரே மூச்சுல மூன்று பதிவுகளும் படித்துவிட்டேன். அடுத்தப்பதிவு இனிமேல் தான் படிக்க வேண்டும். நல்ல வாத்தியார். நல்ல மாணவன். ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய நல்லவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்கள். ரொம்ப நன்றி.

கொத்ஸ். குருதிச்சாதிகள் பற்றி விக்கிப்பசங்களுக்கு எழுதித் தரேன்னு சொல்லி கனகாலம் ஆச்சு. அதுக்குள்ள நீங்களும் உங்க வாத்தியாரும் அதைப் பத்தி தெள்ளத் தெளிவா எழுதிட்டதால எனக்கு வேலை இல்லை. இனி புதுசா ஏதாவது விக்க முடியுமான்னு பாக்குறேன்.

 
At 7:55 PM, Blogger VSK said...

அடடா! உங்க வேலையை நான் செய்துவிட்டேனா, குமரன்!

எல்லாமே நீங்க சொல்லித்தானே நான் செய்துகிட்டு வரேன்!
:))

 
At 4:32 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

SK, சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் லையன்ஸ் கிளப்பில் இரத்தம் கொடுத்த போது, என்னுடைய, என் தங்கையுடைய இரத்த வகையை A1+ என்று போட்டுக் கொடுத்தார்கள். இப்போ பார்த்தால் A1, A2 என்றெல்லாம் ஏதுமில்லை என்று தங்கைக்கு மருத்துவம் பார்த்த ஆர்த்தோ டாக்டர் சொல்கிறார்..

எங்க அப்பாவுக்கு A1B+ve என்கிறார்கள்.. அது வேறு இடத்தில் எடுத்தது..

ஆக இந்த 1,2, என்று ஏதும் இருக்கா? இல்லையா? இருந்தால் என்ன குறியீடு இது?

 
At 6:03 PM, Blogger VSK said...

A,B,AB,O க்ரூப்பில் மொத்தம் 20 துணை க்ரூப்புகள் இருக்கின்றன பொன்ஸ்!

இதில் 99% A க்ரூப்பில் மட்டுமே இருக்கிறது!

மற்ற க்ரூப்பில் இருக்கும் துணைக்ரூப்புகள் 1% தான்!

அதாவது A க்ரூப் மற்ற க்ரூப்புகளை விட அதிகமாக உள்ளது.

இதிலும் A1, A2 தான் மற்றதை விட அதிகம்!

A1 க்ரூப் 80% A2 20%!

ஆனால், இதெல்லாம் ரத்த தானத்தில் ஒன்றும் செய்யாது.

A1, A2, இரண்டு ரத்த க்ரூப் இருப்பவர்களும் ஒருவருக்கொருவர் ரத்த தானம் செய்து கொள்ளலாம்!

இந்த A1, A2 எல்லாம் உறுப்புகளை
தானம் செய்யும் போது சரியகப் பொருந்த மட்டுமே பயன்படும்!

அதனால் உங்கள் ஆர்த்தோ மருத்துவர் சொன்னதும் ஒருவகையில் சரி, தப்பு.

A க்ரூப்பில் உபபிரிவுகள் இருக்கின்றன.
ஆனால், அது ரத்ததானத்தில் ஒன்றும் செய்யாது!

சரியா?

 
At 10:19 PM, Blogger SP.VR. SUBBIAH said...

///இந்த குரூப் சமாச்சாரம் நமது மரபணுக்களில் [genes] உள்ள ஒரு குரோமோஸோமில் [Chromosome 9] பதிந்திருப்பதால், உங்கள் குரூப் எப்போதும், எந்த நிலையிலும் மாறாத ஒன்று!!
பிறந்தது முதல், மரிக்கும் வரை சாதி மாறாது!///

நல்ல வேளை! இறைவன் காப்பாற்றினார்!
இல்லையென்றால் இதிலும் அரசியல் நுழைந்திருக்கும்!

 
At 11:23 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

ரத்த தானத்திலும் பெரிய பங்கு இல்லை, என்றால், இந்த உப பிரிவுகளை எதற்கு கண்டு பிடிக்கிறார்கள் எஸ்கே? ஒருவேளை இந்த உபபிரிவைப் பொறுத்து, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் vulnerable diseases பட்டியல் மாறுமோ?

 
At 12:42 AM, Blogger ravi said...

Rh factor க்கும், செவ்வாய் தோஷத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

 
At 5:11 AM, Blogger VSK said...

அதுதான் சொல்லியிருக்கிறேனே, பொன்ஸ்.

ஏ1-ம் ஏ2-ம் ஒரே சாதியில், சிற்சில வேறுபாடுகளுடன் இருப்பதால், ரத்த தானம் செய்யும் போது பிரச்சினை வருவதில்லை.

ஆனால், இதுவே உறுப்புகளை தானம் செய்யும் போது, ஏ1 பிரிவினரின் சிறுநீரகம், ஏ2 பிரிவு நோயாளிக்குக் கொடுக்கும் போது, இந்த சிறு வேறுபாடுகளே, அதை[உறுப்பை] நிராகரிக்க வாய்ப்பிருக்கிறது.

தயங்காமல் ரத்ததானம் செய்யலாம்.!

 
At 5:12 AM, Blogger VSK said...

//நல்ல வேளை! இறைவன் காப்பாற்றினார்!
இல்லையென்றால் இதிலும் அரசியல் நுழைந்திருக்கும்! //

:)))))))))))

வருகைக்கு நன்றி ஆசானே!

 
At 5:14 AM, Blogger VSK said...

நீங்கள் விளையாட்டாகக் கேட்டீர்களா, இல்லை சீரியஸாகக் கேட்டீர்களா எனத் தெரியவில்லை, திரு. ரவி! :))

ஆனால் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதே என் பதில்!

நன்றி!

 
At 12:15 PM, Blogger சேதுக்கரசி said...

ரவி என்பவர் சீரியசாகத் தான் கேட்டிருக்கார்னு நினைக்கிறேன். ரொம்பக் காலம் முன்னாடி நம்ம தமிழ்ப் பத்திரிகை எதிலோ (குமுதம் அல்லது விகடன்) இது பற்றி ஒரு கட்டுரை பார்த்த ஞாபகம். செவ்வாய் தோசம் இருக்கவங்களுக்கு Rh- இருக்கும்னு!! (கட்டுரை நம்பத் தகுந்ததோ இல்லியோ, நினைவுக்கு வந்து தொலைக்குது!)

 
At 5:27 PM, Blogger VSK said...

உங்களுக்கும் அதே "இல்லை" என்பதே பதில் சேதுக்கரசி!!

 

Post a Comment

<< Home